Voters List: ’இதிலுமா?’ வாக்காளர் பட்டியலில் ஆண்களை விஞ்சிய பெண்கள்! முழு விவரம் இதோ!
“Voter List: சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ள தொகுதியாக உள்ளது”
வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 01.01.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348 வாக்காளர்கள் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 கோடியே 03 லட்சத்து 96 ஆயிரத்து 330 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724 பெண் வாக்காளர்களும், 8,294 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 6 லட்சத்து 60 ஆயிரத்து 419 வாக்காளர்கள் உள்ளனர்.
இதற்கு அடுத்தப்படியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4 லட்சத்து 62 ஆயிரத்து 612 வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 140 பேர் ஆவர். தற்கு அடுத்தப்படியாக இரண்டாமிடத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 624 பேர் உள்ளனர்.
2.01.2024 அன்று வெளியிடப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 3,480 வெளிநாடுவாழ் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 71 வெளிநாடுவாழ் வாக்காளர்களின் பெயர்கள் சிறப்பு சுருக்க முறைத்திருத்த காலத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் இதுவரை, 4,32,805 வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிக்கப்பட்டுள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின்போது பெயர் சேர்த்தலுக்காக பெறப்பட்ட மொத்தப் படிவங்களில், 18 முதல் 19 வயதுள்ள 5 லட்சத்து 26 ஆயிரத்து 205 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். (ஆண்கள் 2,74,035; பெண்கள் 2,52,096; மூன்றாம் பாலினத்தவர் 74).
வாக்காளர் பட்டியலினை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
தற்போது விண்ணப்பிக்க:-
வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டிலுள்ளது (22.01.2024) 01.01.2024 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், கீழ்க்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன்படி,
- வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.
- இணையம் மூலமாக www.voters.eci.gov.in என்ற வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
- கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து “Voter Helpline App” செயலியைத் தரவிறக்கம் செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம்.
12. சிறப்பு சுருக்கமுறைத் திருத்த காலம் மற்றும் தொடர் திருத்த காலங்களில் பெறப்பட்ட முன்கூட்டிய விண்ணப்பங்கள் தொடர் திருத்த காலத்தின் போது அந்தந்த காலாண்டில் உரிய வாக்காளர் பதிவு அலுவலரால் பரிசீலிக்கப்படும்.
ஒரு வாக்காளர் தனது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு படிவம் 6பி-இல் விண்ணப்பிக்கலாம். 22.01.2024 அன்று வரை, தமிழகத்தில் 4.29 கோடி (69.38%) ஆதார் எண்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்காக சேகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.