தொகுதி மறுவரையறை: ரேவந்த் ரெட்டியை சந்தித்த கே.என்.நேரு, கனிமொழி! சொன்னது என்ன தெரியுமா?
இன்றைய தினம் ஹைதராபாத்தில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை திமுக அமைச்சர் கே.என்.நேரு, திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆ.ராசா, அருண் நேரு, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் நேரில் சந்தித்து கூட்டத்தில் பங்கேற்க அழைப்புவிடுத்தனர்.

நாடாளுமன்ற தொகுதி மறுவரை விவகாரத்தை எதிர்த்து திமுக நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க தெலங்கான முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்புவிடுக்கப்பட்டு உள்ளது.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் திமுக
நாடாளுமன்ற தொகுதி மறுவரை தொடர்பாக வரும் மார்ச் 22ஆம் தேதி அன்று திமுக சார்பில் சென்னையில் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆந்திரா, கேரளா, கர்நாடாகா, தெலங்கானா, ஒரிசா, மேற்குவங்கம், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு நேரில் சந்தித்து அழைப்புவிடுத்து வருகிறது.
ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித்தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான குழு சென்று அழைப்பு விடுத்து இருந்தது. ஒரிசா மாநில முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை திமுக எம்பி தயாநிதி மாறன் நேரில் சந்தித்து அழைப்புவிடுத்தார். கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோரை அமைச்சர் பொன்முடி மற்றும் எம்.எம்.அப்துல்லா ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து இருந்தனர்.
தெலங்கானா முதல்வருக்கு அழைப்பு
இந்த நிலையில் இன்றைய தினம் ஹைதராபாத்தில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை திமுக அமைச்சர் கே.என்.நேரு, திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆ.ராசா, அருண் நேரு, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் நேரில் சந்தித்து கூட்டத்தில் பங்கேற்க அழைப்புவிடுத்தனர்.
கட்சி மேலிடத்தின் அனுமதி பெற்று பங்கேற்பேன் - ரேவந்த் ரெட்டி
செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு குழுவை என்னிடம் அனுப்பி, தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுத்தார். பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசு தென் மாநிலங்களுக்கு எதிராக சதி செய்து வருகிறது. இது எல்லை நிர்ணயம் அல்ல, தென் மாநிலங்களுக்கான 'வரம்பு'. இதை எக்காரணம் கொண்டும் ஏற்க மாட்டோம். தென் மாநில மக்களுடன் பழிவாங்க பாஜக இதையெல்லாம் செய்கிறது. ஏனென்றால் அங்குள்ள மக்கள் ஒருபோதும் பாஜகவை வளர அனுமதிக்கவில்லை. பா.ஜ., பழிவாங்கும் அரசியல் செய்கிறது. கட்சி மேலிடத்திடம் அனுமதி பெற்று இக்கூட்டத்தில் கலந்து கொள்வேன் என தெரிவித்தார்.
எங்கள் உரிமைகளை காக்க போராடுவோம் - கனிமொழி
தென்மாநிலங்களுக்கு தொகுதி மறுவரையறை முக்கிமான பிரச்னை. இது வடகிழக்கு மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு பாதிப்பை உண்டாக்கும். எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி செய்கிறார். அனைவரையும் ஒன்றிணைத்து ஒரே குரலில் பேச விரும்புகிறார். தெலங்கானா முதலமைச்சர் மாநில உரிமைகள் பற்றி பேசிவருகிறார். தொகுதி மறுவரையை குறித்து எச்சரிக்கையாக உள்ளர். அவரை கூட்டத்திற்கு அழைத்து உள்ளோம். 22ஆம் தேதி அன்று தொகுதி மறுவரையறை பற்றி விவாதிப்போம். எங்கள் உரிமைகளை காக்க போராடுவோம் என தெரிவித்தார்.
