Vijay Visit Parandur: ’விஜய் செல்வது பரந்தூருக்கா? இல்லை பாகிஸ்தானுக்கா?’ கடும் கட்டுப்பாடுகளை விதித்த போலீஸ்!
பரந்தூருக்கு வரும் விஜயை சந்திக்க பல்வேறு பகுதியில் இருந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் குவிந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைவதற்கு எதிராக போராடி வரும் மக்களை தவெக தலைவர் விஜய் இன்று சந்திக்க உள்ள நிலையில், காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள், 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான பயணிகளின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்து உள்ளது. எனவே சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து ஆணையம் முடிவு செய்தது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 4 ஆயிரத்து 791 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு எதிராக 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த 910 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை சீமான், திருமாவளவன், பிரேமலதா விஜயகாந்த், அதிமுக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட 35 பேர் சந்தித்து உள்ளனர்.
பரந்தூரில் விமான நிலையம் அமைவதற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களை சந்திப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் காவல்துறையிடம் அனுமதி கேட்டு இருந்தார். அவருக்கு இன்று அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பரந்தூர் மக்களை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து பரந்தூருக்கு புறப்பட்டு உள்ளார்.
விஜயின் இந்த மக்கள் சந்திப்புக்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று சந்திக்க விஜய் திட்டமிட்டு இருந்த நிலையில், அதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி தரவில்லை. தனியார் திருமண மண்டபம் ஒன்றில் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
பரந்தூருக்கு வரும் விஜயை சந்திக்க பல்வேறு பகுதியில் இருந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் குவிந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது. ஆதார் அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே உள்ளே செல்ல காவல்துறை அனுமதி வழங்கி வருகின்றது. காவல்துறையினரின் இந்த கட்டுப்பாடுகளை கண்டித்து சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து உள்ளன.
