Kamal Haasan: சினிமாவுக்கு நோ..களத்தில் இறங்கிய விஜய்; ‘அது அவரது சினிமா.. அவர் பாணி’ - கமல்ஹாசன் பதிலடி!
“அது அவர் இஷ்டம்.. அவர் செய்யும் சினிமா.. அவர் பாணி..” - கமல்ஹாசன்!

மக்கள் நீதி மய்யத்தின் 7ம் ஆண்டு விழா இன்று சென்னையில் கமல்ஹாசனின் ஆழ்வார் பேட்டை வீட்டின் முன்பாக நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அரசியல் தொடர்பாக பல்வேறு விஷயங்களை பேசினார். அப்போது அவரிடம் விஜயின் அரசியல் வருகை குறித்தும், சினிமாவை விட்டு வெளியேறி அவர் இயங்க இருப்பது குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “அது அவர் இஷ்டம்.. அவர் செய்யும் சினிமா.. அவர் பாணி.. நான் செய்யும் சினிமா என்னுடைய பாணி.. நான் விஜயோடு ஏற்கனவே பேசி இருக்கிறேன். அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரை வரவேற்ற முதல் குரல் என்னுடையதுதான்.” என்று பேசினார்
மேலும் பேசிய கமல்ஹாசன் “நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல. சோகத்தில் அரசியலுக்கு வந்தவன். மக்களுக்கு இப்படியெல்லாம் நடக்கலாமா என்ற கேள்வி எனக்கு எழுந்தது. அந்த கேள்வியுடன் அரசியலுக்கு வந்தவன் நான். அப்படிப் போனால் என்ன நடக்கும் இப்படி போனால் என்ன நடக்கும் என்பதை எல்லாம் யோசிக்காமல்,நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்.
எல்லோரும்…, ஏன் என் கட்சிக்காரர்கள் கூட நீங்கள் சினிமாவில் நடிக்க செல்கிறீர்களே அப்படியானால் நீங்கள் முழுநேர அரசியல்வாதி கிடையாதா என்று.. முழு நேர அரசியல்வாதி என்பவர் யார்... முழு நேர அரசியல்வாதி என்று இங்கே ஒருவனும் கிடையாது என்பது தான் உண்மை..
முழு நேர அப்பனும் கிடையாது; முழு நேர கணவனும் கிடையாது. முழு நேர குழந்தையும் கிடையாது. அவனவனுக்கு 8 மணி நேரம் தூங்கியாக வேண்டும். 8 மணி நேரம் வேலை செய்தாக வேண்டும்.. நான்கு மணி நேரம் வீட்டில் இருக்க வேண்டும்.. சூழ்நிலை இப்படி இருக்கையில் முழு நேர அரசியல்வாதி இங்கே யார் என்பதை நீங்களே சொல்லுங்கள்
நான் எதற்காக சினிமாவில் நடிக்கிறேன் என்பதை நான் இங்கு சொல்கிறேன்.. எனக்கு இந்த சினிமாவின் வழியாக கார்,வீடு, பங்களா என எல்லாவற்றையும் கொடுத்து வைத்திருக்கிறீர்கள். அப்படி இருக்கையில் நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்.. அப்படி வருகிறேன் என்றால் நான் உங்கள் அன்புக்கு இன்னும் கைமாறு செய்யவில்லை என்று அர்த்தம்.
சினிமாவில் நான் நடித்து விட்டேன்.ஆடிவிட்டேன்; வரி கட்டி விட்டேன் என்று என்னால் போய்விட முடியாது. ஏனென்றால் நீங்கள் கொடுத்த அன்பு இன்னும் அப்படியே பாக்கி இருக்கிறது. அதற்கு வட்டி கூட நான் இன்னும் கொடுக்கவில்லை.
அதற்காகத்தான் நான் அரசியலுக்கு வந்தேன். இங்கே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் அனைத்துமே என் சம்பாத்தியத்தில் கொண்டு வரப்பட்டது. இவ்வளவு திமிராக பேசுகிறார் என்றெல்லாம் கேட்கிறார்கள்.
இந்த திமிரு எனக்கு பெரியாரிடம் இருந்து வந்தது. அவரிடம் கணக்கு கேட்ட பொழுது அடுத்தவன் காசை செலவழிப்பதற்கு தான், நான் கணக்கு பார்த்து செலவழிக்க வேண்டும். என்னுடைய காசை அப்படி அணுக வேண்டியதில்லை என்றார்.
தேர்தல் கமிஷன் தேர்தலில் 95 லட்சம் செலவழிக்கலாம் என்று கூறி இருக்கிறார்கள். அவர்கள் கூறியது போல வெறும் 95 லட்சம் மட்டும் செலவழித்தால், கோவை தெற்கு தொகுதியில் எனக்கு கிடைத்த தோல்விதான் மீண்டும் கிடைக்கும்.
அங்கு எனக்கு கிடைத்த தோல்விக்கான காரணத்தை நான் இங்கு சொல்கிறேன். அங்கு 90 ஆயிரம் நபர்கள் ஓட்டு போடவில்லை. இந்தியாவில் 40% மக்கள் ஓட்டு போட மறுக்கிறார்கள். அவர்களெல்லாம் ஓட்டு போட்டார்கள் என்றால் எல்லாமே இங்கு சரியாகிவிடும் ஆகையால் என்னை கேள்வி கேட்பதை விட்டுவிட்டுஅவர்களை கேள்வி கேளுங்கள்…என்னை அரசியலுக்கு வர அழைப்பது கஷ்டம் என்று கூறினார்கள் ஆனால் அதைவிட கஷ்டம் அரசியலை விட்டு என்னை அனுப்புவது” என்று பேசினார்

டாபிக்ஸ்