DMK vs MNM: 'மக்களவைத் தேர்தலில் கமலின் கட்சிக்கு சீட் கிடையாது'.. கடைசியில் திமுக கொடுத்த டுவிஸ்ட் இதுதான்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dmk Vs Mnm: 'மக்களவைத் தேர்தலில் கமலின் கட்சிக்கு சீட் கிடையாது'.. கடைசியில் திமுக கொடுத்த டுவிஸ்ட் இதுதான்!

DMK vs MNM: 'மக்களவைத் தேர்தலில் கமலின் கட்சிக்கு சீட் கிடையாது'.. கடைசியில் திமுக கொடுத்த டுவிஸ்ட் இதுதான்!

Karthikeyan S HT Tamil
Published Mar 09, 2024 01:59 PM IST

Kamalhassan vs DMK, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை, நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மாநிலங்களவை தேர்தலில் மநீம கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களவை தேர்தலில் மநீம கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து திமுக உடன் மக்கள் நீதி மய்யம் மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்பட்ட நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து திமுக கூட்டணியில் மக்கள் நீதிமய்யம் கட்சி இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மநீம மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று திமுக ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், மக்கள் நீதி மய்யம் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் என்றும் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதி பங்கீடுக்கு பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், "இந்த தேர்தலில் நான் போட்டியிடவில்லை. இந்த கூட்டணிக்கு எங்கள் ஒத்துழைப்பு இருக்கும். இது பதவிக்கான விஷயம் அல்ல. நாட்டுக்கான விஷயம் என்பதால் எங்கு கை குலுக்க வேண்டுமோ அங்கு கை குலுக்கியிருக்கிறோம்." என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ல் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். ஆரம்பம் முதலே அதிமுக, திமுகவுக்கு மாற்று என்ற கோஷத்துடன் மக்கள் நீதி மய்யம். அரசியல் களத்தை சந்தித்தது. 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அந்தக் கட்சி தனித்து போட்டியிட்டது. இதில் தோல்வி அடைந்தாலும் நான்கு தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று அரசியல் அடிச்சுவட்டில் புதிய அத்தியாயத்தை தொடங்கியது. கட்சி தொடங்கி 14 மாதங்களிலே தேர்தலை சந்தித்து கணிசமாக வாக்கு வங்கியை நிரூபித்து கவனிக்கத்தக்க கட்சியாக உருவெடுத்தது. இதே நம்பிக்கையுடன் 2021 சட்டமன்றத் தேர்தலை சந்தித்தார் கமல்ஹாசன். ஆனால், இந்த முறை சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இருப்பினும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் தோல்வி அடைந்தார்.

இந்த சூழலில் வரும் மக்களவைத் தேர்தலில் திமுக உடன் மக்கள் நீதி மய்யம் மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்பட்டது. இந்தநிலையில், இன்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் இணைந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யலாம் எனக் கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9