கனிமவளக் கடத்தலுக்கு காவல்துறை துணைபோகிறதா? கமல்ஹாசன் குற்றச்சாட்டு
கனிமவளக் கடத்தலை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதிமய்யம் வலியறுத்தியுள்ளது.
சென்னை: சேலம் அருகே கனிமவளக் கடத்தல் நடைபெற்று வருவதாக எழும் புகார்களை விசாரிக்காமல் இருப்பது காவல்துறையும் துணைபோவதாக தெரிவதாக மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "சேலம் மாவட்டம் மாமாங்கம், செட்டிச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, வெள்ளைக் கற்கள் எனப்படும் கனிமம் கடத்தப்படுவதாக தொடர்ந்து பல்லாண்டுகளாகப் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.
சமீபத்தில், இந்தக் கற்களைக் கடத்திய லாரியைப் பின்தொடர்ந்த ஊடகவியலாளர்களை, போலீஸார் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ அதிர்ச்சியளிக்கிறது. கடத்தலைத் தடுக்க வேண்டியவர்களே, அதற்குத் துணைபோவது ஏற்புடையதல்ல.
எனவே, காவல்துறை தலைமை இயக்குநர், சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், சேலம் மாவட்ட ஆட்சியர், கனிம வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும் தலையிட்டு, கடத்தலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
கனிமவளக் கடத்தலை அம்பலப்படுத்த நடவடிக்கை எடுத்த ஊடகவியலாளர்களைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்திலும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது." இவ்வாறு கமல்ஹாசன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்