கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்!

Kathiravan V HT Tamil
Published May 06, 2025 01:42 PM IST

”ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்த பூங்குன்றன், அவரது மறைவுக்குப் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கி, தஞ்சாவூர் அருளானந்த நகரில் உறவினர் வீட்டில் தங்கி விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்”

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்!

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது. இவ்வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளரான பூங்குன்றன் இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். இந்த வழக்கில் 250-க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், பூங்குன்றனின் ஆஜர் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

"கொடநாடு வழக்கில் தீவிர விசாரணை"

2017 ஏப்ரல் 23 அன்று கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொள்ளை சம்பவத்தில் காவலாளி ஓம் பகதூர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார், மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் பலத்த காயமடைந்தார். "இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஆனால் முக்கிய குற்றவாளியான கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்தார்" என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனகராஜின் சர்வதேச தொலைபேசி அழைப்பு விவரங்களை Interpol மூலம் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

"பூங்குன்றனின் விசாரணை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது"

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்த பூங்குன்றன், அவரது மறைவுக்குப் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கி, தஞ்சாவூர் அருளானந்த நகரில் உறவினர் வீட்டில் தங்கி விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். "பூங்குன்றனிடம் பங்களாவில் கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் குறித்து விசாரணை நடைபெறலாம்" என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் வி.என். சுதாகரன், முன்னாள் பாதுகாப்பு அதிகாரி சயான் உள்ளிட்டோரிடம் மார்ச் மாதம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

"Interpol உதவியுடன் ஆதாரங்கள் திரட்டல்"

சிறப்பு புலனாய்வுக் குழு, குற்றவாளிகளின் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் மின்னணு சாதனங்களில் உள்ள தகவல்களை ஆய்வு செய்ய Interpol-இன் உதவியை நாடியுள்ளது. "கூடுதல் சாட்சிகளை விசாரிக்கும் பணி தொடர்கிறது, இந்த வழக்கில் மேலும் முக்கிய தகவல்கள் வெளிவரலாம்" என சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தனர். பூங்குன்றனின் இன்றைய ஆஜர்ப்பு, கொடநாடு வழக்கில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.