‘நான் கோவைக்கு போய் 13 வருசமாச்சு.. எதற்கு என்னை சுட்டுப் பிடிக்க வேண்டும்?’ வரிச்சியூர் செல்வம் பேட்டி!
Varichur Selvam: தற்போது நான் திருந்தி, ஏராளமான திருமணங்களை நடத்தி வைக்கும் அளவிற்கு மாறியுள்ளேன். ஆனால் ஏன், என் மீது இப்படி அவதூறு பரப்புகிறார்கள் என தெரியவில்லை.

Varichur Selvam: தன்னை சுட்டுப்பிடிக்க கோவை போலீசார் உத்தரவிட்டதாக வந்த தகவலைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள தனது இல்லத்தில் ரவுடி வரிச்சியூர் செல்வம், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
நான் கோவை போகவே இல்லை
‘‘நான் கோயம்புத்தூர் சென்று 13 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் தற்போது கோவை காவல்துறையில் சுட்டு பிடிக்க உத்தரவு என்ற செய்தி வெளியாகி எனக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நான் திருந்தி வாழ்ந்து வருகிறேன். கடந்த சில ஆண்டுகளாக என் மீது எந்த வழக்குகளும் இல்லை. என்னை முழுவதுமாக காவல் துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
தற்போது நான் திருந்தி, ஏராளமான திருமணங்களை நடத்தி வைக்கும் அளவிற்கு மாறியுள்ளேன். ஆனால் ஏன், என் மீது இப்படி அவதூறு பரப்புகிறார்கள் என தெரியவில்லை. தற்போது உள்ள ரவுடிகள் மனிதர்களாக இல்லை, மிருகங்கள் போல இருப்பதனால் தான் காவல்துறையினர் அவர்களை என்கவுண்டர் செய்கிறார்கள். கால் கையை உடைக்கிறார்கள். காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.
எனக்கு எதிரிகள் யாரும் இல்லை
இன்ஸ்டாகிராமிற்காக கையில் அரிவாள் வைத்து சுத்துவது, வாளால் கேக் வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். அது போலிசுக்கு தெரிந்தால் கைகால்கள் உடைக்கப்படும். என் குடும்பம் பேரன் , பேத்திகள் என தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். எனக்கு எதிரிகள் என்று யாருமே கிடையாது.
தற்போது திருமண நிகழ்வுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறேன். என்னை என்கவுண்டர் செய்ய உள்ளதாக வந்த செய்தியால் எனது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருமண நிகழ்வுகளில் கூட பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
என் மீது பழைய வழக்குகள் மட்டுமே உள்ளது. நான் எந்த பிரச்சனைக்கும் செல்வது இல்லை. தற்போது இளைஞர்கள் மத்தியில் கஞ்சா போதை பவுடர் பழக்கம. அதிகரித்துள்ளது,’’ என்று அப்போது வரிச்சியூர் செல்வம் பேசினார்.
கோவை போலீஸ் குறி வைத்தது ஏன்?
மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டு பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் கட்டப்பஞ்சாயத்திற்காக தனது ஆதரவாளர்களுடன் ஆயுதங்களுடன் வரிச்சியூர் செல்வம் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல். கோவை மாநகரின் செல்வபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் இரவு நேரத்தில் போலீஸ் சோதனை. அசம்பாவிதங்கள் நிகழும் முன்னர் வரிச்சியூர் செல்வத்தை பிடிக்கவும், தேவைப்பட்டால் காலில் சுட்டு பிடிக்கவும் காவல் துறையினருக்கு உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது.

டாபிக்ஸ்