Missing Aircraft: சென்னை அருகே மாயமான விமானத்தின் பாகங்கள் 8 ஆண்டுக்கு பின் கண்டுபிடிப்பு.. எப்படி?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Missing Aircraft: சென்னை அருகே மாயமான விமானத்தின் பாகங்கள் 8 ஆண்டுக்கு பின் கண்டுபிடிப்பு.. எப்படி?

Missing Aircraft: சென்னை அருகே மாயமான விமானத்தின் பாகங்கள் 8 ஆண்டுக்கு பின் கண்டுபிடிப்பு.. எப்படி?

Karthikeyan S HT Tamil
Published Jan 12, 2024 07:38 PM IST

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி வங்கக்கடல் பகுதியில் இந்திய விமானப்படையின் ஏஎன்-32 ரக இரட்டை எஞ்சின் விமானம் மர்மமான முறையில் மாயமானது.

இந்திய விமானப்படையின் ஏஎன்-32 விமானம்.
இந்திய விமானப்படையின் ஏஎன்-32 விமானம். (Twitter)

கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி வங்கக் கடல் மீது பறந்துகொண்டிருந்த இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏஎன்-32 இரட்டை எஞ்ஜின் விமானம் மர்மமான முறையில் காணாமல் போனது. தாம்பரம் விமானப் படை நிலையத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்ட விமானம் போர்ட் பிளேருக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால், நடுவழியில் காணாமல் போனது. 

காலை 9:12 மணியளவில் விமானம் சென்னையிலிருந்து கிழக்கே 280 கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோது விமானத்துடனான ரேடார் தொடர்பை அதிகாரிகள் இழந்தனர். மாயமான விமானத்தில் 6 பணியாளர்கள், 11 விமானப்படை வீரர்கள், இரண்டு இந்திய ராணுவ வீரர்கள், இந்திய கடலோர காவல்படையைச் சேர்ந்த ஒருவர் உள்பட மொத்தம் 29 பேர் பயணம் செய்தனா்.

இந்திய இராணுவ வீரர்கள் ஒரு நீர்மூழ்கிக் கப்பல், கப்பல்கள் மற்றும் பல விமானங்களைப் பயன்படுத்தி விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் தீவிர தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பல முறை தேடியும் விமானத்தின் பாகங்கள், அதில் பயணம் செய்தவர்களின் உடல்கள் என எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. இதையடுத்து, விமானத்தில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாகக் கருதப்பட்டு செப்டம்பர் 15, 2016 அன்று மீட்புப் பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், வங்கக்கடல் பகுதியில் கடந்த 2016-ல் மாயமான இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தால், கடலுக்கடியில் தேடும் இயந்திரத்தைக் கொண்டு தேடி வந்ததில், சென்னைக் கடற்கரையிலிருந்து 310 கிலோ மீட்டர் தொலைவில் சேதமடைந்த விமானப் படை விமானத்தின் உடைந்த பாகங்களை கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனார் என்றழைக்கப்படும் கருவியில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தேடுதல் பணி நடைபெற்றதில் 3,400 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுளள்தாகக் கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.