Congress: ’தேவைக்கு அதிகமாக தலைவராக இருந்துவிட்டேன்!’ கே.எஸ்.அழகிரி வேதனை!
“நான் தலைவராகும் போது ஒரு சாவியை கொடுத்து பொறுப்பை ஒப்படைத்தார்கள், இன்றைக்கு ஒரு பெரிய சாவி கொத்தையே அவரிடம் கொடுத்துள்ளேன். நான் அந்த சாவியை நான் தொட்டதே கிடையாது”
புதிய தலைவராக அண்ணன் செல்வப்பெருந்தகை வீற்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவரின் திறமைகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் 138 கால காங்கிரஸ் கட்சியின் நோக்கம். தந்தை பெரியார், ராஜாஜி, காமராஜர், மூப்பனார் என அவ்வளவு தலைவர்களை இந்த கட்சி பார்த்துள்ளது.
திருநாவுக்கரசர் அவர்களுக்கும், எனக்கும்தான் நல்ல இடம் கிடக்கவில்லை. மற்றவர்களுக்கு எல்லாம் நல்ல இடம் கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பெரிய ஆதரவாளர்களாக தமிழ்நாட்டில் தலித் மக்கள் உள்ளார்கள். கடந்த 70 ஆண்டுகாலமாக நிறைய வாக்குகளை நாம் பெற்றாலும், அவர்களுக்கு பொறுப்புகளை குறைவாக கொடுத்துள்ளோம். அதனை சரி செய்யும் விதமாகத்தான் செல்வப்பெருந்தகை வந்துள்ளார்.
செல்வப்பெருந்தகையின் வெற்றி, காங்கிரஸ் கட்சியின் வெற்றி, காமராஜருக்கு பிறகு நம்மால் கட்சியை வெற்றிகரமாக வைத்திருக்க முடியவில்லை.
சித்தாந்த ரீதியாக, கொள்கை ரீதியாக நாம் தவரும் போது நம்மை மக்கள் புறக்கணிக்கிறார்கள். ஒரு இயக்கத்திற்கு சித்தாந்தம், கொள்கை தேவை இல்லை என்று நினைக்காதீர்கள். மகாத்மா காந்தியின் சித்தாந்தம்தான் வெற்றி பெற்றதே தவிர தனிமனிதராக காந்தி வெற்றி பெறவில்லை.
மகாத்மா காந்தியை விட இந்து மதத்தை ஏற்றுக் கொண்டவர்கள் யாரும் கிடையாது. ஆனால் அவரே, இது எல்லாம் எனக்குத்தானே தவிர அரசாங்கத்திற்கு கிடையாது என சொன்னார்.
நாம் ராமரை எதிர்க்கவில்லை; ராமரை ஆதரிக்கிறோம், அதே நேரத்தில் நமது நண்பர்கள் மதத்தையும் ஆதரிக்கிறோம், நேசிக்கிறோம். நாம் மதசார்பின்மையை அழுத்தமாக பேச வேண்டும். மத சார்பின்மையை அழுத்தமாக பேசும்போதுதான் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவை தோற்கடிக்க முடியும்.
கோயில் கட்டிவிட்டால் ஆட்சிக்கு வந்துவிட முடியும் என எந்த முட்டாள் நினைப்பான்?; எனக்கு தெரிந்து எங்கள் கிராமங்களில் கும்பாபிஷேகம் செய்தவர்கள், பஞ்சாயத்து போர்டு தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர். காரணம் மக்கள் அதற்காக வாக்கு போடுவதில்லை. ராமரின் புகழை கெடுத்துவிடதீர்கள் என மோடிக்கும், ஆர்.எஸ்.எஸ்க்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் தலைவராகும் போது ஒரு சாவியை கொடுத்து பொறுப்பை ஒப்படைத்தார்கள், இன்றைக்கு ஒரு பெரிய சாவி கொத்தையே அவரிடம் கொடுத்துள்ளேன். நான் அந்த சாவியை நான் தொட்டதே கிடையாது.
நான் தேவையான அளவுக்கு மட்டுமல்ல; தேவைக்கு அதிகமாகவும் தலைவராக இருந்துவிட்டேன். ஒன்றை பெருவதில் எவ்வளவு மகிழ்ச்சி உள்ளதோ; அதே மகிழ்ச்சி அதை துறப்பதிலும் உள்ளது.
செல்வப்பெருந்தகை அவர்கள் வெற்றிகரமாக செயல்படுவார். நமது குறைகளை எப்போதும் வெளியில் சொல்லக்கூடாது. நமக்குள்ளேயே பேசித் தீர்க்க வேண்டும். பிரச்னைகளை வெளியில் சொல்வதால், மக்கள் காங்கிரஸ் கட்சியை தவறாக நினைக்கிறார்கள்.