Seeman: ’வேல்முருகனை திமுக கூட்டணியில் இணைய சொன்னதே நான்தான்!' உண்மையை கக்கிய சீமான்!
திமுக கூட்டணியில் சீமான்தான் இணைய சொன்னதாக வேல்முருகன் கூறி உள்ளது குறித்த கேள்விக்கு சீமான் பதில் அளித்து உள்ளார்.
2021 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை திமுக கூட்டணியில் இணைய சொன்னதே நான்தான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரள மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுகின்றது. ஆனால் அதை ஆய்வு செய்ய வந்த கேரள மாநில அதிகாரிகள் ’இது ஒன்றும் ஆபத்தானது அல்ல’ என்று கூறுகின்றனர். நீ கடவுளின் தேசம் என்றால் நாங்கள் என்ன கன்றாவி தேசமா?, கடந்த ஆட்சி முதலே இது நடந்து வருகின்றது. வடமாவட்டங்களில் வெள்ள பாதிப்புக்காக அறிவிக்கப்பட்ட 2 ஆயிரம் நிதி, பலபேருக்கு இன்னும் போய் சேரவில்லை. நீதிமன்ற வாசல், மருத்துவமனைகளில் கொலை நடைபெறுகின்றது என கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூல்கள் அரசுடையமை ஆக்கப்பட்டு உள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்த நாடே 90 விழுக்காடு அவர்கள் நாடுதான், கழிப்பிடம், குடிப்பிடம் தவிர மற்ற எல்லா இடங்களிலும் அவர் பெயர்தான் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நாடே தமிழ்நாடு என்பதற்கு பதில் கருணாநிதி நாடு என்று மாற்றிவிடலாம் என கூறினார்.
திமுக கூட்டணியில் சீமான்தான் இணைய சொன்னதாக வேல்முருகன் கூறி உள்ளது குறித்த கேள்விக்கு, வேல்முருகன் முதலில் டிடிவி தினகரன் கூட்டணிக்கு செல்லலாமா என்று என்னிடம் தொலைபேசியில் பேசினார். அவருக்கு எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. அப்படி இருந்தால் திமுகவுக்கே நீங்கள் செல்லலாம் என நான் கூறினேன் என தெரிவித்தார்.