Anna University: கல்லூரிக்குள் குற்றவாளி நடமாட எப்படி அனுமதித்தீர்கள்? அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் சரமாரி கேள்வி!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி மற்றும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்ஷித் ஆகியோர் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள், விடுதி காப்பாளர்கள், காவலாளிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
ஏற்கெனவே குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை அண்ணா பல்கலைக்கழகத்தில் எப்படி நடமாடவிட்டார்கள் என தமிழ்நாடு அரசுக்கு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமை
டிசம்பர் 23ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்த மாணவி மிரட்டப்பட்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
இதை விசாரித்த காவல்துறையினர் ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். அவர் தப்பிக்க முயன்ற நிலையில் தவறி விழுந்ததில் அவரது கை மற்றும் கால்களிலும் எலும்புமுறிவு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவினர் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆன நிலையில் அரசியல் ரீதியாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
யார் அந்த சார்?
இது தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் ‘சார்’ என்ற பெயரில் ஒருவருடன் ஞானசேகரன் பேசியதாக தகவல் வெளியானது. ஆனால் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் தன்னுடன் பெரிய கூட்டம் இருப்பதை போல் கட்டவே ஞானசேகரன் இப்படி பேசியதாக காவல்துறை தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
எதிர்க்கட்சிகள் போராட்டம்
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேற்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதிமுக சார்பில் மாவட்டம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
தாமக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து நேற்றைய தினம் விசாரணையை தொடங்கியது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி மற்றும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்ஷித் ஆகியோர் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள், விடுதி காப்பாளர்கள், காவலாளிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவியை தனிமையில் சந்தித்தும் விசாரணை நடைபெற்றது.
குற்றவாளியை எப்படி நடமாடவிட்டீர்கள்?
விசாரணையை முடித்துக் கொண்டு டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ”பாதிக்கப்பட்ட மாணவியிடம் பேசினோம். விசாரணை தொடர்பான ஆய்வு அறிக்கை விரைவில் சமர்பிப்போம். ஏற்கெனவே குற்றசெயல்களில் ஈடுபட்ட நபரை பல்கலைக்கழகத்திற்குள் எப்படி நடமாட அனுமதித்தார்கள்” என்று மம்தா குமாரி தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.