Thiruparankundram: திருப்பரங்குன்றம் விவகாரம்: மதுரையில் குவிந்த இந்து அமைப்பினர்.. ஸ்தம்பித்த பழங்காநத்தம்!
Thiruparankundram: தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோயில் முன்பாக திரண்ட முருக பக்தர்கள், இந்து அமைப்பினர் 1000-க்கும் மேற்பட்டோர், ‘முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா’ என கோஷங்களை எழுப்பிய ஆரவாரம் செய்தனர்.

நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இந்து முன்னணி சார்பில் மதுரை பழங்காநத்தத்தில் அறப்போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணியின் சார்பில் இன்று நடத்தப்பட இருந்த அறப்போராட்டத்திற்கு மதுரை மாநகர காவல் துறை அனுமதி மறுத்தது. மேலும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா பிப்ரவரி 3, 4 ஆகிய இரு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி இன்றைய தினம் மாவட்டம் முழுவதும் 5 எஸ்.பிக்கள் தலைமையில் 3500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அதே போல் திருப்பரங்குன்றம் மலைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு, அங்கு வரக்கூடிய இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் காலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் ஆர்பாட்ட நோக்கில் வருபவர்களதை் தேடித் தேடி போலீசார் கைது செய்து வந்தனர்.
உயர்நீதிமன்றம் அளித்த அனுமதி
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்து முன்னணியின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், இந்து முன்னணியின் அறப்போராட்டம் பழங்காநத்தம் ரவுண்டாப் பகுதியில் மாலை 5 முதல் 6 மணிக்குள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோயில் முன்பாக திரண்ட முருக பக்தர்கள், இந்து அமைப்பினர் 1000-க்கும் மேற்பட்டோர், ‘முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா’ என கோஷங்களை எழுப்பிய ஆரவாரம் செய்தனர். பின்னர், ஆர்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்ட பழங்காநத்தம் ரவுண்டாவை நோக்கி சென்றனர்.
பழங்காநத்தத்தில் குவிந்த இந்து அமைப்பினர்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்திலிருந்து ஏராளமானோர் பங்கேற்ற அறவழி ஆர்பாட்டத்தில், கணிசமான அளவில் பெண்கள் பங்கேற்றனர். ‘கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா..’ என்ற முழக்கங்களுடன் பழங்காநத்தம் பகுதி பரபரப்பானது. இந்த ஆர்பாட்டத்தில், 50-க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள், பாஜக, இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிசத், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்பினர் ஆதரவாக பங்கேற்றனர்.
நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு முன்பாகவே, மாலை 6 மணிக்கு முன்பாகவே இந்த அறப்போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இதில் பாஜக மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, இராம ஸ்ரீனிவாசன், இந்து முன்னணியைச் சேர்ந்த மாநில அமைப்பாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் பலரும் பங்கேற்றனர். அறப்போராட்டத்தை தொடர்ந்து பழங்காநத்தம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
