டாப் 10 தமிழ் நியூஸ்: இந்து முன்னணி நிர்வாகி கைது முதல் தமிழ்நாடு அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு வரை!
டாப் 10 தமிழ் நியூஸ்: தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் தொகுப்பை இன்றைய காலை பொழுதின் டாப் 10 செய்தித் தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

டாப் 10 தமிழ் நியூஸ் 16.04.2025: இந்து முன்னணி நிர்வாகி கைது, நெல்லையில் தனியார் பேருந்து கடத்தல், தமிழில் மட்டுமே இனி அரசாணை உள்ளிட்ட முக்கிய செய்திகளை இன்றைய டாப் 10 நியூஸ் தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
இந்து முன்னணி நிர்வாகி கைது
மத மோதலை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட பழனியைச் சேர்ந்த இந்து முன்னணி மாநில நிர்வாகி ஜெகன் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மத மோதலை உருவாக்குதல், அமைதியை சீர்குலைத்தல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பழனி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 ஆண்டுகள் சிறை
திருவாரூரில் கடந்த 2014ம் ஆண்டு ராஜீவ் காந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கியபோது பிடிபட்ட நகராட்சி கட்டட ஆய்வாளர் நாகராஜனுக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புழல் சிறையில் செல்போன், கஞ்சா பறிமுதல்
சென்னை புழல் மத்திய சிறையில் கண்காணிப்புக் கோபுரம் அருகே தூய்மை பணியின்போது புதரில் கிடந்த பொட்டலத்தில் இருந்து 1 செல்போன் மற்றும் 39 கிராம் கஞ்சா பறிமுதல். சாலையில் இருந்து சிறைக்குள் கஞ்சா பொட்டலத்தை வீசிய மர்ம நபர்கள் குறித்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 மாணவிகள் மீட்பு
ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் கடைசி பாடத்தை எழுதிவிட்டு மாயமான 5 மாணவிகளும் திருச்சி அருகே மீட்கப்பட்டனர். மாணவிகளின் பெற்றோர் நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், 5 பேரும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மீட்கப்பட்டனர்.
முதலமைச்சர் தலைமையில் கூட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்களின் கூட்டம் இன்று நடக்க உள்ளது. துணை வேந்தர்களை நியமிக்கவும், நீக்கவும் மாநில அரசுக்கு அதிகாரத்தை மாற்றிய சட்டம் உச்ச நீதிமன்றத்தின் வழியே சமீபத்தில் அமலுக்கு வந்தது.
மாமியாரை ஆள் வைத்து தாக்கிய மருமகள் கைது
ஜோலார்பேட்டை அருகே மூதாட்டியை தாக்கி 4 சவரன் தங்க நகை பறிக்கப்பட்ட விவகாரம். மாமியார் உடனான தகராறு காரணமாக மருமகளே ஆள் வைத்து தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலம். மாமியார் தொடர்ந்து கொடுமை செய்து வந்ததால், பழிவாங்க மாமன் மகன் மூலம் இவ்வாறு செய்ததாக மருமகள் வசந்தி வாக்குமூலம் அளித்துள்ளார். நகையை பறிமுதல் செய்த போலீசார், வசந்தி மற்றும் மைக்கேல் ராஜ் இருவரையும் கைது செய்தனர்.
தனியார் பேருந்து கடத்தல்
நெல்லை சந்திப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தை கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர். நெல்லையில் கடத்தப்பட்ட பேருந்து தூத்துக்குடி அருகே மீட்கப்பட்டது. நெல்லையில் இருந்து பேருந்தை கடத்திச் சென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த ரமேஷ், வேல்ராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மதுபோதையில் தனியார் பேருந்தை கடத்திய இருவரும், அதே நிறுவனத்தில் ஓட்டுநர்களாக பணிபுரிவதாக தகவல் வெளியாகி உள்ளது.
உள்வாங்கிய கடல்
திருச்செந்தூர் கோயில் முன்புள்ள கடலில் மூன்றாவது நாளாக இன்றும் 50 அடி உள்வாங்கிய கடல். பச்சை நிற பாசிகள் படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிகின்றன.கடல் உள்வாங்கிய பகுதிகளில் பக்தர்களை பாதுகாப்பாக குளிக்க அறிவுறுத்தி வருகின்றனர் கடற்கரை பாதுகாப்பு பணியினர்.
மேலும் படிக்க | மாநில உரிமைகளை மீட்டெடுக்க உயர்நிலைக் குழு.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!
தலைமைக்காவலர் பணியிட மாற்றம்
தஞ்சை -நடுக்காவேரி காவல்நிலையம் முன்பு விஷம் குடித்து இளம்பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடுக்காவேரி காவல்நிலைய தலைமைக் காவலர் மணிமேகலை, நடுக்காவேரி உதவி ஆய்வாளர்கள் அறிவழகன், கலியபெருமாள் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
தமிழில் மட்டுமே இனி அரசாணை
தமிழில் மட்டுமே இனி அரசாணைகள் வெளியிட வேண்டும்; கற்றாணைக் குறிப்புகள் தமிழிலே இருக்க வேண்டும், அரசுப்பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும், பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதிலளிக்க வேண்டும் - தமிழ்நாடு அரசு உத்தரவு

டாபிக்ஸ்