Madurai : ‘ஆட்டம்.. பாட்டம்.. கொண்டாட்டம்..’ மூதாட்டி மறைவை திருவிழாவாக கொண்டாடிய குடும்பத்தினர்!
கல்யாண சாவு என்று கிராமத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. அதை, அப்படியே, கண் முன் கொண்டு வந்து, கண்ணீர் மல்க நடக்கும் நிகழ்வை, கலகலப்பாக மாற்றியது நாகம்மாள் பாட்டியின் குடும்பம்.
![Madurai : ‘ஆட்டம்.. பாட்டம்.. கொண்டாட்டம்..’ மூதாட்டி மறைவை திருவிழாவாக கொண்டாடிய குடும்பத்தினர்! Madurai : ‘ஆட்டம்.. பாட்டம்.. கொண்டாட்டம்..’ மூதாட்டி மறைவை திருவிழாவாக கொண்டாடிய குடும்பத்தினர்!](https://images.hindustantimes.com/tamil/img/2024/12/20/550x309/Usilai_Death_2_1734671022083_1734671031472.jpg)
உசிலம்பட்டி அருகே மறைந்த மூதாட்டியின் ஆசையை நிறைவேற்ற, அவர் ஆசைப்படி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என திருவிழா போல கொண்டாடத் தீர்த்த குடும்பத்தாரின் செயல், இறப்பு நிகழ்வை சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னப்பாலார்பட்டியைச் சேர்ந்தவர் பூசாரி பரமத்தேவர் மனைவி நாகம்மாள். இவரது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்த நிலையில், நாகம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக தனது 96வது வயதில் உயிரிழந்தார். மறைந்த மூதாட்டிக்கு 2 மகன்கள், நான்கு மகள்கள் உள்ள சூழலில், மூன்று தலைமுறையைக் கண்ட இந்த முதாட்டிக்கு தற்போது வரை இவரது பேரன் பேத்தியாக 78 பேர் உள்ளனர்.
மூதாட்டியின் ஆசையை நிறைவேற்றிய குடும்பம்
இந்நிலையில் தனது இறப்பிற்கு பின் இறுதி சடங்கு நிகழ்வை மற்றவர்களை போல சோகத்தோடு இல்லாது, ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் வெகுவிமர்சையாக கொண்டாடி சந்தோசமாக வழி அனுப்ப வேண்டும் என மூதாட்டி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.,
அதன் படி மூதாட்டியின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம், பேரன் பேத்திகள் இணைந்து இன்று ஆடல் பாடல் நிகழ்ச்சி, ரேடியோ, குடும்ப பெண்களின் கும்மியாட்டம் மற்றும் சிறுவர் சிறுமியரின் நடனம், கிராமிய கலை நிகழ்ச்சி என கொண்டாடி இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
கலகலப்பான இரங்கல் வீடு
ஒரு கட்டத்தில் இரங்கல் வீடு என்பதை கடந்து, திருவிழா போல அந்த பகுதி மாறியது. பேரன், பேத்திகள், குடும்பத்தார் என அனைவரும் ஆட்டம் பாட்டமாய் கொண்டாடித்தீர்த்தனர். ஓப்பாரிகளில் கூட கொண்டாடங்களே தெரிந்தது. சோகத்தை மறைத்துக் கொண்டு, மூதாட்டியின் ஆசையை நிறைவேற்ற, அவர்கள் எடுத்த முயற்சி, பலராலம் பாராட்டவும் பெற்றது.
கல்யாண சாவு என்று கிராமத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. அதை, அப்படியே, கண் முன் கொண்டு வந்து, கண்ணீர் மல்க நடக்கும் நிகழ்வை, கலகலப்பாக மாற்றியது நாகம்மாள் பாட்டியின் குடும்பம். இல்ல நிகழ்ச்சிகள், சீர் வரிசைகள் என அனைத்திலும் வித்தியாசம் காட்டும் உசிலம்பட்டி பகுதியில், இறுதிச் சடங்கையும் சுவாரஸ்யமாக நடத்தி முடித்திருக்கிறது, நாகம்மாள் பாட்டியின் குடும்பம்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்