தலைப்பு செய்திகள்: மாற்றுத்திறனாளிகள் போராட்டம் முதல் நீலகிரி இ-பாஸ் மையம் வரை!
பிரதமருக்கு முதலமைச்சர் கேள்வி, திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி, கோயம்பேட்டில் மாற்றுத்திறனாளிகள் கைது, ஓசூர் விமான நிலையம் குறித்த ஆய்வறிக்கை சமர்பிப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.மாற்றுத்திறனாளிகள் கைது
உதவித் தொகை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர். கலைந்து செல்ல மறுத்து தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக காவல்துறையினர் கைது செய்தனர்.
2.அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் அரசாக திமுக அரசு உள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் அதிக மாற்றுத்திறனாளிகளை சேர்த்ததுதான் தமிழ்நாடு என அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி.
3.ஓசூரில் விமான நிலையம்
ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை விமான போக்குவரத்து ஆணையம் தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்தது. அரசு தேர்வு செய்த 2 இடங்களில் விமான நிலையம் அமைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என வரைவு அறிக்கையில் தகவல்.
4. நீலகிரியில் 5 இடங்களில் இ-பாஸ் சோதனை
நீலகிரியில் 16 இடங்களுக்கு பதில்காக கல்லாறு, குஞ்சப்பணை, மசினகுடி, மேல்கூடனூர், கெத்தை ஆகிய 5 இடங்களில் மட்டும் இ-பாஸ் சோதனை மையம் செயல்படுகிறது.
5.பிரதமருக்கு முதலமைச்சர் கேள்வி
மராத்தியை தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை எனும் மகாராஷ்டிர முதலமைச்சரின் நிலைப்பாட்டை, மத்திய அரசு அங்கீகரிக்குமா என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி.
6.அச்சம் அடைவது ஏன்?- ஈபிஎஸ்
அதிமுக-பாஜக கூட்டணியால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அச்சம் அடைவது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி.
7.திமுகவை வீழ்த்த வேண்டும்
பங்காளி சண்டைகளை தாண்டி திமுகவை வீழ்த்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி.
8.பாஜக கூட்டணி பாடையில் போவதற்கு சமம்
“பாஜகவுடன் கூட்டணி வைப்பதும், பாடையில் போய் உட்காருவதும் ஒன்றுதான்” என பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேச்சு.
9.திருவண்ணாமலையில் ஏற்பாடு
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்காக 20 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். அண்ணாமலையார் திருக்கோயில் மற்றும் கிரிவலப் பாதையை உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்குத் தேவையான இடங்களில் போதுமான கழிவறைகளும் குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படும். அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் என்றும் முறையான தரமான உணவுகள் வழங்க வேண்டும் இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவு.
10.குழந்தையை விற்ற சித்தமருத்தவர் கைது
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை 1.50 லட்சத்துக்கு விற்பனை செய்த சித்தமருத்தவர் சத்ய பிரியா என்பவர் கைது.
