’யார் அந்த முட்டாள்?’ அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறித்த கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பதில்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’யார் அந்த முட்டாள்?’ அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறித்த கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பதில்!

’யார் அந்த முட்டாள்?’ அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறித்த கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பதில்!

Kathiravan V HT Tamil
Published May 05, 2025 04:27 PM IST

“இதை தடுக்க உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வதே ஒரே வழி. மக்களை திசை திருப்ப மா.சுப்பிரமணியன், முதலமைச்சர் போல் முட்டாள்தனமாக உளற வேண்டாம்”

’யார் அந்த முட்டாள்?’ அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறித்த கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பதில்!
’யார் அந்த முட்டாள்?’ அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறித்த கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பதில்!

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே, காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை கண்டித்து பாஜக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்துகொண்டார். 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வு, பஹல்காம் தாக்குதல், மதுரை ஆதீனம், மற்றும் திருமாவளவன் உள்ளிட்டோர் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

பஹல்காம் தாக்குதல் 

பஹல்காம் தாக்குதலை “மோசமான, அநாகரிகமான, மனித குலத்திற்கு எதிரான செயல்” எனக் கண்டித்த ஹெச்.ராஜா, இதற்கு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் காரணம் எனக் குறிப்பிட்டார். “தேசவிரோத, பாகிஸ்தான் ஆதரவு சக்திகளான திருமாவளவன், கம்யூனிஸ்டுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அறிக்கைகள் வெளியிடுகின்றனர். ஆனால், இங்குள்ள முஸ்லிம்கள் தேசபக்தர்கள். யுத்தம் அறிவிக்கப்பட்டாலும், அவர்கள் இந்தியாவிற்கும், இராணுவத்திற்கும் ஆதரவு அளிப்பார்கள். இவர்கள் நல்லவர்கள். ஆனால், திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்டுகள் தீய சக்திகள்,” என அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை ஆதரித்த அவர், “சிந்து நதி நீர் பங்கீட்டை தற்காலிகமாக நிறுத்தியதால், பாகிஸ்தானின் 80% நீர் ஆதாரமும், மின்சார உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை திருமாவளவன், கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க வேண்டாமா?” என கேள்வி எழுப்பினார். மேலும், “பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதிவு செய்பவர்களை கைது செய்ய காவல்துறை அறிவிப்பு வெளியிட வேண்டும். திருமாவளவன், கம்யூனிஸ்டுகளை கண்காணிக்க மக்கள் கண்காணிப்பு குழு தேவை,” என வலியுறுத்தினார்.

மதுரை ஆதீனம் விவகாரம்

மதுரை ஆதீனம் குறித்து பேசிய எச்.ராஜா, “மதுரையில் காவி உடை அணிந்த சாமியார் என்பதால், காவல்துறை அவரை மிரட்ட வேண்டாம். பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் திருமாவளவன், கம்யூனிஸ்டுகளை கண்காணிக்க வேண்டும். காவி உடை அணிந்தவருக்கு எதிராக மிரட்டல் விடுவதாக காவல்துறை செயல்படக் கூடாது,” என தெரிவித்தார். காவல்துறையை தவறாக கூறவில்லை எனவும், ஆனால் தேசவிரோத சக்திகளை கண்காணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நீட் தேர்வு குறித்த விமர்சனம்

தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நீட் தேர்வு ரத்து செய்யப்படும்” என கூறியதற்கு கடுமையாக பதிலளித்த எச்.ராஜா, “யார் அந்த முட்டாள்? ஒன்றரை லட்சம் பேர் தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதியுள்ளனர். ஒருவர் தவறு செய்திருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். மா.சுப்பிரமணியன் படித்திருந்தால், கேள்விக்கு பதில் சொல்லட்டும்,” என விமர்சித்தார்.

நீட் தேர்வு இல்லையெனில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடைபெறும் என கேள்வி எழுப்பிய அவர், “பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை செய்யலாமா? ஜிப்மர் தேர்வில் இது பொருந்துமா? இந்தியாவிலுள்ள மருத்துவக் கல்லூரிகள் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணை ஏற்குமா? தமிழ்நாட்டில் 11,400 மருத்துவ இடங்கள் உள்ளன. இந்தியா முழுவதும் மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வு அவசியம். இல்லையெனில், ஜிப்மர், டெல்லி என தனித்தனியாக தேர்வு எழுத வேண்டும்,” என விளக்கினார்.

நீட் தேர்வை 2013-ல் மன்மோகன் சிங் ஆட்சியில் திமுக ஆதரவுடன் கொண்டு வந்ததாகவும், திமுக பாராளுமன்ற உறுப்பினர் காந்திய செல்வன் இதற்கு ஆதரவு அளித்ததாகவும் குறிப்பிட்ட ஹெச்.ராஜா, “இதை தடுக்க உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வதே ஒரே வழி. மக்களை திசை திருப்ப மா.சுப்பிரமணியன், முதலமைச்சர் போல் முட்டாள்தனமாக உளற வேண்டாம்,” என கேட்டுக்கொண்டார்.

சாதிவாரி கணக்கெடுப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2024-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவித்ததை ஹெச்.ராஜா மேற்கோள் காட்டினார். காங்கிரஸ் கட்சி, பஹல்காம் தாக்குதலை திசை திருப்ப சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டிய அவர், “2010-ல் ப.சிதம்பரம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என கூறினார். காங்கிரஸ் ஆட்சியில் பலமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தபோது, ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை?” என கேள்வி எழுப்பினார்.