‘துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. மாநாட்டில் அரசியல் செய்கிறார்கள்’ ஆர்.என்.ரவி பேச்சு
‘மாநாட்டில் பங்கேற்க இருந்த துணை வேந்தர்களை உளவுத்துறை போலீசாரை வைத்து மிரட்டி உள்ளார்கள். துணை வேந்தர்கள் மாநாட்டில் அரசியல் செய்கிறார்கள்’

நீலகிரி மாவட்டம் உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டு துவக்க விழா மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் இன்று நடந்து வருகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில், குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில்,
‘‘துணை குடியரசு தலைவர் கலந்து கொண்டு இருப்பது மிகவும் முக்கியமானது. தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் சிறப்பாக உள்ளது. அரசு பள்ளிகள் நிலை மோசமாக உள்ளது. இந்த இரண்டு நாள் மாநாடு மிக முக்கியமானது. இந்த மாநாடு கல்வியை அடுத்த கட்டம் கொண்டு செல்ல மிக உதவியாக இருக்கும், அதற்காக விவாதிக்க இருக்கிறோம்.
தமிழ்நாடு பல்கலைகழகங்களை சேர்ந்த யாரும் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டு உள்ளார்கள். ASR ரிப்போர்ட் அறிக்கை படி அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுத படிக்கத் தெரியவில்லை. சிங்கிள் டிஜிட் எண்கள் படிக்க தெரியவில்லை. மாநில பல்கலைகழகங்கள் பட்டாதாரிகளை உருவாக்குவதைத் தாண்டி, அவர்களுக்கு தரமான கல்வியை வழங்கவில்லை.
மாநாட்டில் பங்கேற்க இருந்த துணை வேந்தர்களை உளவுத்துறை போலீசாரை வைத்து மிரட்டி உள்ளார்கள். துணை வேந்தர்கள் மாநாட்டில் அரசியல் செய்கிறார்கள்,’’ என்று மாநாட்டில் ஆர்.என்.ரவி பேசினார்.
துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பு
முன்னதாக மாநாட்டு துவக்க விழா மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று தமிழகம் வந்துள்ளார்.
டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் காலை 10.40 மணியளவில் கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தடைந்த குடியரசுத் துணைத் தலைவரை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட காவல் ஆணையாளர் சரவணன் சுந்தர் ஆகியோர் வரவேற்றனர்.
இதனையடுத்து, தனி ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத் துணைத் தலைவர் உதகைக்கு புறப்பட்டார். அங்கு துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
