Freshworks Jobs: ‘+2 முடிச்சா IT வேலை ரெடி! பயிற்சியின் போது 10 ஆயிரம் சம்பளம்! அப்புறம் பல லட்சத்தில் சம்பளம்!’
”Freshworks: மாணவர்களின் நிதிச் சுமையைக் குறைக்க, பயிற்சிக்கு தொடர்புடைய அனைத்து உபகரணங்கள் (புத்தகங்கள் மற்றும் மடிக்கணினி), மாதாந்திர சம்பளமாக 10 ஆயிரம் ரூபாய் மற்றும் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு ஆகியவையும் கட்டணமின்றி வழங்கப்படும் என Freshworks நிறுவனம் தெரிவித்து உள்ளது. .”
பிரபல சாஸ் மென்பொருள் நிறுவனமான ஃப்ரஷ் ஒர்க்ஸ் நிறுவனம் தனது Freshworks STS சாஃப்ட்வேர் அகாடமி மூலம் 12 மற்றும் டிப்ளமோ படித்து முடித்த மாணவர்களுக்கு ஓராண்டு உதவித் தொகை உடன் கூடிய பயிற்சிகளை வழங்கி பணி வழங்க திட்டமிட்டு உள்ளது. இந்த பயிற்சி பெறும் மாணவர்கள் Freshworks நிறுவனம் மட்டுமின்றி பிற பன்னாட்டு நிறுவனங்களிலும் பணி செய்ய முடியும் என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
சம்பளத்துடன் கூடிய பயிற்சி
மாணவர்களின் நிதிச் சுமையைக் குறைக்க, பயிற்சிக்கு தொடர்புடைய அனைத்து உபகரணங்கள் (புத்தகங்கள் மற்றும் மடிக்கணினி), மாதாந்திர உதவித்தொகையாக 10,000 ரூபாய் மற்றும் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு ஆகியவையும் கட்டணமின்றி வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
எப்படி நடக்கிறது?
இந்த வேலை வாய்ப்பு பயிற்சி திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஃப்ரெஷ்வொர்க்ஸ் எஸ்டிஎஸ் அகாடமி இணையதளம் வழியாகச் சமர்ப்பிக்கலாம். அதன் பிறகு ஆன்லைன் நுழைவுத் தேர்வு FSAT (Freshworks Software Aptitude Test) நடத்தப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் தர்க்கரீதியான திறன்களை மதிப்பிடுவதற்கு வீடியோ மற்றும் ஆப்லைன் நேர்காணலில் பங்கேற்பார்கள். நேர்காணல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இறுதிப்பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
பயிற்சி நடைபெறும் இடம்
இந்த பயிற்சியில் தேர்வாகும் மாணவர்களுக்கு குளோபல் இன்ஃபோசிட்டி பார்க், பெருங்குடி, சென்னை, தமிழ்நாடு 600096 என்ற முகவரியில் உள்ள ஃப்ரெஷ்வொர்க்ஸ் அலுவலக வளாகத்தில் பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்த பயிற்சியில் சேர விரும்பும் +2 மற்றும் டிப்ளமோ படித்த மாணவர்கள் சேர்க்கைகள் வரும் மே மாதம் 21 தேதிக்குள் https://www.freshworks.com/company/philanthropy/software-academy/ என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
'கிராமபுற மாணவர்களை வளர்ப்பதே எங்கள் நோக்கம்!’
இந்த பயிற்சி திட்டம் குறித்து ஃப்ரஷ் ஒர்க்ஸ் நிறுவனத்தின் சமூக தாக்கங்கள் பிரிவின் இயக்குநர் ஷண்முக அனந்தராமன் கூறுகையில், சோஹோ ஸ்கூல்ஸ் அமைப்பை உத்வேகமாக கொண்டு இந்த திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இந்த திட்டம் மூலம் நிறைய மக்களுக்கு உதவி செய்ய முடியும் என்பது எங்கள் நம்பிக்கையாக உள்ளது.
12ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்ல முடியாத ஏழை மாணவர்கள், டிப்ளமோ படித்தவர்களுக்கு பயிற்சி கொடுத்து மென்பொருள் நிறுவனங்களில் வேலை அளிப்பதை நாங்கள் நோக்கமாக கொண்டு உள்ளோம்.
குறிப்பாக நகரப்பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் இன்றி கிராம புறங்களில் வசிக்கும் தமிழ் மீடியம் படித்த மாணவர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம்.
ஆண்டுக்கு 100 பேர் வீதம் மூன்று ஆண்டுகளாக இது போன்ற பயிற்சிகளை அளித்து வருகிறோம். பயிற்சியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு கோடிங் பயிற்சி, ஆங்கிலத்தில் தகவல் தொடர்பு கொள்ளும் திறன் பயிற்சி, பிரச்னைகளுக்கு தீர்வுகளை காணுவதற்கான வழிமுறைகள் சார்ந்த பயிற்சிகளை அளிக்கிறோம். மேலும் நேரடியாக மென்பொருள் தயாரிப்பு பணிகளிலும் பயிற்சி மாணவ, மாணவிகள் ஈடுபட்டுத்த படுகின்றனர். இதற்காக எங்கள் ஐடி வளாகத்திற்குள் மூன்று வகுப்பறைகளை கட்டி அவர்களுக்கு தனி பயிற்சிகளை அளித்து வருகிறோம்.
கடந்த ஆண்டு நடந்த பயிற்சி திட்டத்தில் கலந்து கொண்ட 100 மாணவர்களில் வெறும் 15 மாணவர்கள் மட்டுமே சென்னையில் இருந்து வந்தவர்கள். மீதம் உள்ள மாணவ, மாணவிகள் ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமபுற பின்னணியில் இருந்து வந்தவர்கள்.
இவ்வாறு பயிற்சி பெற்ற மாணவர்களை ஃப்ரஷ் ஒர்கஸ் மட்டுமில்லாமல் பிற மென்பொருள் நிறுவனங்களும் கேம்பஸ் இண்டர்விவ் முறையில் ஆண்டுக்கு 5 முதல் 6 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு தேர்வாகி உள்ளனர் என கூறினார்.