ஜெயலலிதா பிறந்தநாள்: ’ஈபிஎஸ் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது ஏன்?’ செங்கோட்டையன் பேட்டி!
ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இருப்பினும் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் தங்கமணி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாதது ஏன் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்து உள்ளார்.
ஈபிஎஸ் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள்:-
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாள் விழா சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொண்டாடப்பட்டது.
கட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டார். பின்னர் 77 கிலோ எடை கொண்ட கேக் வெட்டிய அவர், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இருப்பினும் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் தங்கமணி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு:-
கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையைன் கூறுகையில், இன்றைய தினம் பிறந்தநாள் காணும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவுடைய நன்னாளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதில் நாங்கள் கலந்து கொள்ள இருக்கிறோம்.
நாளை கழக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவருடைய ஆணைப்படி பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தலைமை கழக நிர்வாகிகள் பலபேர் அம்மாவுடைய பிறந்தநாள் நிகழ்ச்சிகளை எழுச்சியோடு நடத்துகின்றனர். அன்னதானங்கள் வழங்குகிற நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. நினைவு நாள் என்றால் எல்லோரும் அங்கே செல்ல வேண்டும். பிறந்தநாள் என்கின்ற போது அது மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு ஏதுவாக நாம் அந்தந்த பகுதியிலே இருக்கிற மக்களை ஆர்வப்படுத்துவதற்கு, கழகத்தை உற்சாகப்படுத்துவதற்கு மீண்டும் கழக ஆட்சி அமைவதற்கு ஏதுவாக இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார். ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாட சென்னை செல்லாதது ஏன் என்ற கேள்விக்கு செங்கோட்டையன் நேரடியாக பதில்தர மறுத்துவிட்டார்.
