'அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா 'ரோட்டில் நடமாட முடியாது' முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் எச்சரிக்கை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  'அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா 'ரோட்டில் நடமாட முடியாது' முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் எச்சரிக்கை!

'அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா 'ரோட்டில் நடமாட முடியாது' முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் எச்சரிக்கை!

Kathiravan V HT Tamil
Published Jun 20, 2025 02:38 PM IST

"ஒரு மக்கள் தலைவரை, மக்கள் நேசிக்கிற தலைவரை, மக்கள் வரவேற்கிற தலைவரை அவதூறாகச் சித்தரிக்கும் செய்திகள் எங்களது நெஞ்சைக் கொதிக்க வைக்கிறது, இதயம் சுக்குநூறாக உடைகிறது"

'அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா 'ரோட்டில் நடமாட முடியாது' முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் எச்சரிக்கை!
'அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா 'ரோட்டில் நடமாட முடியாது' முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் எச்சரிக்கை!

அமைச்சரும், திமுக ஐடி விங் செயலாளருமான டி.ஆர்.பி. ராஜா, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து சர்ச்சைக்குரிய கார்டூனை வெளியிட்டதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், டி.ஆர்.பி. ராஜா தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் நடமாட முடியாத அளவிற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்துவார்கள் என்று அவர் எச்சரித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார், எடப்பாடி பழனிசாமி ஒரு எளிய விவசாயி என்றும், தனது உழைப்பால் உயர்ந்து முதலமைச்சராகி, இன்று எதிர்க்கட்சித் தலைவராக, ஆளும் ஸ்டாலின் அரசின் மக்கள் விரோதப் போக்குகளை தைரியமாக சுட்டிக்காட்டி மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்குவதாகவும் புகழாரம் சூட்டினார். ஈ.பி.எஸ்-ஸின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"இதற்கு பதில் சொல்ல வக்கற்ற தி.மு.க. தனிமனித விமர்சனத்தில் இறங்கியுள்ளது" என்று உதயகுமார் குற்றம்சாட்டினார். தி.மு.க. ஒரு குடும்பக் கட்சி என்றும், கார்ப்பரேட் கம்பெனி என்றும் சாடிய அவர், டி.ஆர்.பி. ராஜா தனது அமைச்சர் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவதூறான கருத்துக்களைப் பரப்புவதாகக் கூறினார். "ஒரு மக்கள் தலைவரை, மக்கள் நேசிக்கிற தலைவரை, மக்கள் வரவேற்கிற தலைவரை அவதூறாகச் சித்தரிக்கும் செய்திகள் எங்களது நெஞ்சைக் கொதிக்க வைக்கிறது, இதயம் சுக்குநூறாக உடைகிறது" என்று அவர் உணர்ச்சிவசப்பட்டார்.

மேலும், அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட குடிமராமத்து திட்டம், 7.5% இட ஒதுக்கீடு, 11 மருத்துவக் கல்லூரிகள் போன்ற எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்ட உதயகுமார், இ.பி.எஸ். மக்களை நேசித்த தலைவர் என்றும், அவருக்கு அவதூறு பரப்புவதற்கு தி.மு.க.வுக்கு எந்த யோக்கியதையும், தகுதியும், திராணியும் இல்லை என்றும் தெரிவித்தார்.

டி.ஆர்.பி. ராஜாவை கடுமையாக விமர்சித்த உதயகுமார், “வரலாறே தெரியாத டி.ஆர்.பி. ராஜா, இன்றைக்கு அவதூறு செய்தியை பரப்பி இருக்கிறார். ஆகவே அவரெல்லாம் மக்கள் பணிக்கே லாயக்கில்லாதவர், மக்கள் சேவைக்கே லாயக்கில்லாதவர்” என்றார்.

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பேசிய உதயகுமார், கீழடியை தமிழகத்திற்கும் உலகிற்கும் கொண்டு வந்தவர் ஈ.பி.எஸ். என்றும், அதைப்பற்றி பேச டி.ஆர்.பி. ராஜாவுக்கு என்ன தகுதி என்றும் கேள்வி எழுப்பினார். உண்மையான வரலாற்றைச் சொன்னால் ஏன் தி.மு.க.வுக்கு வயிறு எரிகிறது என்றும் அவர் வினவினார். அ.தி.மு.க. தொண்டர்கள் தரம் தாழ்ந்து விமர்சிக்க மாட்டார்கள் என்றும், ஆனால் தங்கள் தலைவரை அவதூறாகப் பேசினால் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.