’பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நிற்கமாட்டேன்!’ மௌனம் கலைத்தார் ஜெயக்குமார்! அதிமுக குறித்து பரப்பரப்பு பேட்டி!
”ADMK BJP Alliance: பாஜக கூட்டணி காரணமாக அதிமுகவில் இருந்து விலகுவதாக வெளியான செய்திகளை திட்டமிட்ட பொய் செய்தி என மறுத்தார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய மீம்கள் மற்றும் செய்திகளால் யூடியூப் சேனல்களுக்கு வருமானம் கிடைத்திருக்கலாம் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்”

அதிமுக - பாஜக கூட்டணி காரணமாக அதிமுகவில் இருந்து விலகியதாக வெளியான செய்திகளுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
தமிழ் புத்தாண்டு மாற்றம் குறித்து விமர்சனம்
ஜெயக்குமார், திமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2006-2011 காலகட்டத்தில் தமிழ் புத்தாண்டை சித்திரை மாதத்திலிருந்து தை மாதத்திற்கு மாற்றியதை கடுமையாக விமர்சித்தார். இது தமிழர் பண்பாடு மற்றும் மரபுக்கு எதிரானது எனக் கூறிய அவர், 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சித்திரை மாதத்தை மீண்டும் தமிழ் புத்தாண்டாக அறிவித்ததை நினைவுகூர்ந்தார். 2012ல் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதல் தமிழ் புத்தாண்டு விழாவிற்கு தாம் தலைமை தாங்கியதை பெருமையுடன் குறிப்பிட்டார்.
அம்பேத்கரின் பிறந்தநாள் மரியாதை
அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளையொட்டி, அவரது புகழையும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை மற்றும் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய பணிகளையும் ஜெயக்குமார் பாராட்டினார். அம்பேத்கரின் பிறந்தநாள் தமிழ் புத்தாண்டு நாளில் அமைந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதிமுக சார்பில் அவரது சிலைகள் மற்றும் படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
பொய் செய்திகளுக்கு மறுப்பு
பாஜக உடன் கூட்டணி வைத்தால் அதிமுகவில் இருந்து விலகுவதாக நான் சொன்னதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறி இருந்தார். “நான் எந்த நேரத்திலும் அப்படி சொல்லவே இல்லை” என ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.
அதிமுகவில் இருந்து விலகியதாக தனது பெயரில் பரவி வரும் வதந்திகள் குறித்து பேசிய ஜெயக்குமார், பாஜக கூட்டணி காரணமாக அதிமுகவில் இருந்து விலகுவதாக வெளியான செய்திகளை திட்டமிட்ட பொய் செய்தி என மறுத்தார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய மீம்கள் மற்றும் செய்திகளால் யூடியூப் சேனல்களுக்கு வருமானம் கிடைத்திருக்கலாம் என்று நகைச்சுவையாக குறிப்பிட்ட அவர், தனது குடும்பத்தின் 75 ஆண்டு கால திராவிட பாரம்பரியத்தையும், அதிமுகவிற்கு தனது விசுவாசத்தையும் வலியுறுத்தினார். “பதவிக்காக யாருடைய வீட்டு வாசலிலும் நின்றதில்லை, இனியும் நிற்க மாட்டேன்,” என்று உறுதியாக தெரிவித்தார்.
அதிமுகலேயே பயணம்
அதிமுகவை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தொடங்கிய நோக்கத்தை நினைவூருத்திய ஜெயக்குமார், கருணாநிதியின் தீய ஆட்சியை எதிர்க்கவே இயக்கம் தொடங்கப்பட்டதாகவும், அதே பாதையில் தனது பயணம் தொடரும் என்றும் கூறினார்.
