OPS VS EPS: ’ஓபிஎஸ் ஒரு கொசு! பாஜக கூட்டணியில் இணையும் திமுக!’ போட்டு உடைத்த டி.ஜெயக்குமார்!
பாலுக்கும் காவலன்; பூனைக்கும் தோழன் என்பதாக திமுக அரசின் நிலைப்பாடு இதில் உள்ளது. எல்.முருகன் 11லட்சம் கோடி கொடுத்ததாக கூறுகிறார். அது மக்கள் செலுத்தும் வரிப்பணம் தானே. உத்தரப்பிரதேசம், பீகார், ஒரிசா, ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு பாஜக அரசு எவ்வளவு கொடுத்தது என்று சொல்ல முடியுமா?

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு கொசு என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சனம் செய்து உள்ளார்.
சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்தநாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
டி.ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு:-
இந்தியாவிலேயே மே தினத்தை கொண்டாடியவர் தோழர் சிந்தனை சிற்பி சிங்காரவேலர்தான். முற்போக்கு சிந்தனைகளை தமிழ் மக்களுக்கு அவர் கொண்டு சென்றார். அவருடைய அருமை, பெருமைகளை உணர்ந்து அதிமுக ஆட்சியில் ராயபுரத்தில் மணிமண்டபம் அமைத்து, ஈபிஎஸ் ஆட்சியில் அரசு விழா அறிவிக்கப்பட்டது.
கேள்வி:- அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி இருக்காது என ஓபிஎஸ் கூறி உள்ளாரே?
கொசுக்களை பற்றி பேச வேண்டாம். நாட்டில் எவ்வளவோ பிரச்னை உள்ளது. அவர் ஏதோ ரகசியம் என்று சொல்கிறார். ரகசியம் என்ற வார்த்தை வந்தாலே யாரோடு யார் தொடர்பு என்று தெரியும். நீட் ரகசியம் என்றால் உதயநிதி. திமுக உடன் தொடர்பு இருந்து அந்த நோய் தொற்றிக் கொண்டு விட்டது. ரகசியம் என்று சொல்லி தொண்டர்களை ஏமாற்றும் வேலையை ஓபிஎஸும் அவரது வகையறாக்களும் செய்து வருகின்றனர்.
கேள்வி:- தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசு கூறி உள்ளதே?
அண்ணா வழியில் அதிமுக அரசு இருமொழிக் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. ஒரு மொழியை விரும்பி யார் வேண்டுமானாலும் கற்கலாம். ஆனால் ஒரு மொழியை யாரும் திணிக்க கூடாது. ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ள சூழல் உள்ளது. தமிழ் தாய் மொழியாக உள்ளது. தாய் மொழி எந்த நிலையும் அழியக் கூடாது என்பதற்காக மொழிப்போராட்டம் நடைபெற்றது. பாலுக்கும் காவலன்; பூனைக்கும் தோழன் என்பதாக திமுக அரசின் நிலைப்பாடு இதில் உள்ளது. எல்.முருகன் 11லட்சம் கோடி கொடுத்ததாக கூறுகிறார். அது மக்கள் செலுத்தும் வரிப்பணம் தானே. உத்தரப்பிரதேசம், பீகார், ஒரிசா, ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு பாஜக அரசு எவ்வளவு கொடுத்தது என்று சொல்ல முடியுமா?
பாஜக அரசு என்ன உங்கள் வீட்டு பணத்தையா கொடுக்குறீர்கள். யானை பசிக்கு சோளப்பொறி என்பது போல் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குகிறது. ஆனால் குஜராத் மாநிலத்திற்கு என்றால் அதிக நிதியை கொடுக்கின்றனர். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி கிடைக்கும் என்றால், இது இந்திய அரசியலமைப்பு திட்டத்திற்கு எதிரானது. மத்திய அரசை பொறுத்தவை மாபெரும் துரோகத்தை செய்து வருகிறது. 2026ஆம் ஆண்டுக்கு பிறகு பாஜக உடன் திமுக சேர்வதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளது. இதனால் திமுக இதில் அதிகம் பேசாது. ஆர்ப்பாட்டம் நடத்துவதுபோல் செய்துவிட்டு, பிரச்னையை அப்படியே விட்டுவிடுவார்கள். தமிழ்நாட்டு மக்கள் நலன் கருதி அதிமுக பேசி வருகிறது.

டாபிக்ஸ்