காஷ்மீர் தாக்குதல் எதிரொலி! ’மத்திய உள்துறை இணையமைச்சர் ஆகும் அண்ணாமலை!’ அமித்ஷாவின் பலே திட்டம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  காஷ்மீர் தாக்குதல் எதிரொலி! ’மத்திய உள்துறை இணையமைச்சர் ஆகும் அண்ணாமலை!’ அமித்ஷாவின் பலே திட்டம்!

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி! ’மத்திய உள்துறை இணையமைச்சர் ஆகும் அண்ணாமலை!’ அமித்ஷாவின் பலே திட்டம்!

Kathiravan V HT Tamil
Published Apr 23, 2025 02:06 PM IST

”காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் நடந்து முடிந்துள்ள நிலையில், அமைச்சரவை மாற்றத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது”

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி! ’மத்திய உள்துறை இணையமைச்சர் ஆகும் அண்ணாமலை!’ அமித்ஷாவின் பலே திட்டம்!
காஷ்மீர் தாக்குதல் எதிரொலி! ’மத்திய உள்துறை இணையமைச்சர் ஆகும் அண்ணாமலை!’ அமித்ஷாவின் பலே திட்டம்!

ஐபிஎஸ் To அரசியல்வாதி

கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை, அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு விவசாயத்தில் கவனம் செலுத்த போவதாக அறிவித்தார். பின்னர் பாஜகவில் இணைந்து அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவரக ஆனார். 2021 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார். 2024ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் கோவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 

ராஜ்யசபாவுக்கு செல்லும் அண்ணாமலை 

அவரது பதவிக்காலம் நிறைவு பெற்றதால், புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் நடந்த கூட்டத்தில் அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. "அண்ணாமலையின் நிர்வாக திறமைகளை தேசிய அளவில் பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம்" என்று ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அண்ணாமலையை ஆந்திராவில் இருந்து ராஜ்யசபா எம்.பி ஆக்க பாஜக தேசிய தலைமை திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானது. 

மத்திய உள்துறை இணையமைச்சர் பதவி

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் நடந்து முடிந்துள்ள நிலையில், அமைச்சரவை மாற்றத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் எம்.சாமி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஆந்திராவில் காலியாக உள்ள ராஜ்யசபா இடத்தில் இருந்து அண்ணாமலை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும், இதற்கு பிரதமர் மோடி மற்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆதரவு அளிக்கின்றனர் என்றும் கூறினார்.

உள்துறையை நிர்வாகம் செய்ய திட்டம் 

அண்ணாமலை தற்போது ஓய்வு கோரியுள்ளதாகவும், தனது குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவதாகவும் தெரிவித்த அவர், "மே மாத இறுதியில் அல்லது நடுப்பகுதியில் அண்ணாமலை எம்.பி.யாகி, உள்துறை இணை அமைச்சராக நியமிக்கப்படுவார். அவரது ஐபிஎஸ் பின்னணி மற்றும் சட்டம்-ஒழுங்கு துறையில் அனுபவம் இருப்பதால், தேசிய பாதுகாப்பு மற்றும் காவல்துறை அமலாக்கத்தில் அவர் திறமைசாலி," என்று கூறினார். 

மேலும் பிரதமர் மோடியிடம் அமித்ஷா பேசும் போது, ‘நான் அண்ணாமலையை பார்த்துக் கொள்கிறேன், அவரை என்னிடம் விடுங்கள்’ கூறியதாகவும் கூறினார். எனவே, அண்ணாமலை உள்துறை இணை அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு வாய்ப்பு அதிகம்," என்று பிரகாஷ் சாமி தெரிவித்தார்.

ஆந்திரவில் இருந்து எம்பி  

தமிழ்நாட்டில் ராஜ்யசபா தேர்தல் வரவுள்ள நிலையில், திமுகவுடன் போட்டியிட முடியாது என்றும், அதிமுகவின் ஆதரவை அண்ணாமலை விரும்பவில்லை என்றும் பிரகாஷ் குறிப்பிட்டார். "ஆந்திராவில் ஒரு எதிர்க்கட்சி எம்.பி. ராஜினாமா செய்ததால், மூன்று அல்லது மூன்றரை ஆண்டு பதவிக்காலம் கொண்ட காலி இடம் உள்ளது. அங்கிருந்து அண்ணாமலை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்து எம்.பி.க்களாக தேர்வு செய்யப்படவில்லை. அவர்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜனசேனா ஆதரவுடன் அண்ணாமலை எம்.பி.யாகலாம்," என்று அவர் விளக்கினார்.

சந்திரபாபு நாயுடு மோடியின் பேச்சை மீற மாட்டார் என்றும், அண்ணாமலையை எம்.பி.யாக தேர்ந்தெடுப்பதில் எந்த தடையும் இருக்காது என்றும் பிரகாஷ் தெரிவித்தார். இருப்பினும் "இது உறுதியான தகவல் இல்லை, ஆனால் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன," என்று அவர் எச்சரிக்கையுடன் தனது பேட்டியை முடித்தார்.

ஆந்திராவில் ராஜ்யசபா இடைத்தேர்தல் 

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி விஜயசாய் ரெட்டி தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே தனது பதவியை ராஜினாமா செய்ததால் காலியான இடத்தை தெலுங்கு தேசம் கட்சி தற்போது கைப்பற்றும் நிலை உள்ளது. .மே 9, 2025 அன்று நடைபெறவுள்ள ராஜ்யசபா இடைத்தேர்தலில் அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரது பதவிக்காலம் 2028 வரை இருக்கும்.

Kathiravan V

TwittereMail
கதிரவன் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக உள்ளார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக துறைகளில் 2016ஆம் ஆண்டு முதல் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார். அரசியல், தொழில்முனைவு, வணிகம், ஆன்மீகம் மற்றும் நாட்டு நடப்பு உள்ளிட்ட பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறார். தூசி பாலிடெக்னிக் கல்லூரியில் DME பட்டயப்படிப்பு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ அரசியல் அறிவியல், SRM பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முடித்து உள்ளார். புதிய தலைமுறை டி.வி., ஏபிபி நாடு ஆகிய முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணியாற்றி வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.