திருமாவளவன் உடன் சந்திப்பு எதிரொலி! திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டதாக வைகை செல்வன் பேட்டி!
”திமுக கூட்டணியில் ஓட்டை ஏற்பட்டுவிட்டதாகவும், இது முதற்கட்டமாக மட்டுமே உள்ளதாகவும், அடுத்தடுத்த கட்டங்களில் மேலும் விவரங்கள் தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளார்”

ஆளும் திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்து உள்ளார்.
வைகை செல்வன் பேட்டி
காஞ்சிபுரம் மாநகராட்சியின் நிர்வாக சீர்க்கேட்டை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகை செல்வன், திமுக கூட்டணியில் ஓட்டை ஏற்பட்டுவிட்டதாகவும், இது முதற்கட்டமாக மட்டுமே உள்ளதாகவும், அடுத்தடுத்த கட்டங்களில் மேலும் விவரங்கள் தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் திருமாவளவனை சமீபத்தில் திருச்சியில் சந்தித்ததை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இது முதல் கட்டம் மட்டுமே என்றும், அடுத்த கட்டங்களில் மேலும் வெளிப்படையான மாற்றங்கள் தெரியவரும் எனவும் அவர் தெரிவித்தார். இந்தக் கருத்து, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் பின்னணி
மூத்த பத்திரிகையாளர் தராசு, இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கையில், இதுபோன்ற சந்திப்புகள் தேர்தலுக்கு முன்பு கூட்டணி பேச்சுவார்த்தைகளில் பொதுவானவை என்று கூறினார். கட்சிகள் தங்கள் நலன்களைப் பாதுகாக்கவும், அதிக இடங்களைப் பெறவும் இதுபோன்ற நிர்பந்தங்களை மறைமுகமாக உருவாக்க முயல்கின்றன. இருப்பினும், விசிக, இடதுசாரிகள் அல்லது காங்கிரஸ் கட்சி ஆகியவை அதிமுக-பாஜக கூட்டணியுடன் இணைய வாய்ப்பில்லை என்றும், அது அரசியல் ரீதியாக தற்கொலைக்கு சமமான முடிவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இதுபோன்ற கருத்துகள் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே வெளியிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.