Thiruparankundram: பாரம்பரிய பல்லுயிர் பாதுகாப்பு தலமாக மாறும் திருப்பரங்குன்றம்! அறநிலையத்துறை அனுமதி தருமா?
Biodiversity Heritage Site: காடழிப்பு, மாசுபாடு, நகரமயமாக்கல் போன்ற மனித நடவடிக்கைகளால் ஆபத்தில் இருக்கக்கூடிய பல்வேறு தாவர மற்றும் விலங்கு இனங்களைப் பாதுகாக்க பாரம்பரிய பல்லுயிர் தளங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

திருப்பரங்குன்றம் மலையை பாரம்பரிய பல்லுயிர் தலமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை தெரிவித்து உள்ளது
திருப்பரங்குன்றம், ஹார்விபட்டியை சேர்ந்த இளங்கோ என்பவர் மதுரை வனச்சரக அலுவலருக்கு, திருப்பரங்குன்றம் மலையை பாரம்பரிய பல்லுயிர் தலமாக அறிவிக்க கோரி மனு அளித்து இருந்தார். அம்மனு தொடர்பாக மதுரை வனச்சரக அலுவலர் விளக்கம் அளித்து பதில் எழுதி உள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாடில் உள்ள மலை
அதில், 29.01.2025 ஆம் தேதி களத்தணிக்கை மேற்கொண்டதில் புகார் மனுவில் குறிப்பிட்ட பகுதியில் மாநகராட்சி சூழியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்படி இடமானது இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது எனத் தெரியவருகிறது. மேலும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள இடத்தில் பல்வேறு வகையான மரங்கள் அடந்து காணப்படுகிறது. திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பந்தப்பட்ட துறை அனுமதிக்கும் பட்சத்தில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் நடவு தொடர்பான திட்டங்கள் அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.
