செண்பகவல்லி தடுப்பணை: வளம்குன்றி கிடக்கும் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்! ஒன்று திரட்ட விவசாயிகள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  செண்பகவல்லி தடுப்பணை: வளம்குன்றி கிடக்கும் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்! ஒன்று திரட்ட விவசாயிகள்!

செண்பகவல்லி தடுப்பணை: வளம்குன்றி கிடக்கும் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்! ஒன்று திரட்ட விவசாயிகள்!

Kathiravan V HT Tamil
Published May 17, 2025 03:53 PM IST

“செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரிசெய்யாததால், தென்காசி மாவட்டத்தில் சிவகிரி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் வெம்பக்கோட்டை, சாத்தூர் வட்டாரங்கள், எட்டயபுரம், விளாத்திகுளம் வட்டாரங்கள் என சுமார் 40,000 ஏக்கர் சாகுபடி நிலம் வளம் குன்றி கிடக்கிறது”

செண்பகவல்லி தடுப்பணை: வளம்குன்றி கிடக்கும் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்! ஒன்று திரட்ட விவசாயிகள்!
செண்பகவல்லி தடுப்பணை: வளம்குன்றி கிடக்கும் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்! ஒன்று திரட்ட விவசாயிகள்!

தேவர் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை (மே 17, 2025) அன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு சிவகிரி ரத்தின வேலு தலைமை வகித்தார். தென்மலை பாபு ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தின் தொடக்கத்தில் மறைந்த புளியங்குடி பாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா, தென்மலை ஜமீன்தார் முத்தரசு பாண்டியன், தெற்கு அரண்மனை பூமிநாதன், சிவகிரி வெங்கடேசப் பண்ணையார், கலிங்கப்பட்டி ஒன்றியக் கவுன்சிலர் அருண் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம். அர்ச்சுணன் ஆலோசனைக் கூட்டத்தைத் துவக்கி வைத்து உரையாற்றினார். ராயகிரி பிச்சாண்டி, பனையூர் பத்மநாபன், களஞ்சியம் பெண்கள் அமைப்பு பொன்னுத்தாய், கூடலூர் சிவஞான பாண்டியன், குருசாமி பாண்டியன், வடக்கு சத்திரம் தங்கவேலு, கலிங்கப்பட்டி வழக்கறிஞர் ராகவன், அர்ஜுனா நதி பாசனம் துலுக்க பட்டி ராமமூர்த்தி, வைப்பாறு பாசனம் ராம் பாண்டியன், குண்டாறு, கிருதுமால் பாசனம் கோபாலகிருஷ்ணன், இருக்கன்குடி கணேசன் ஆகியோர் கூட்டத்தில் கருத்துரை வழங்கினர். கூட்டத்துக்கான தீர்மானத்தை துலுக்க பட்டி ராமமூர்த்தி முன்மொழிய, அது அனைவரின் முழு ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக தென்மலை காளிமுத்து நன்றி கூறினார்.

பின்னணி 

மேற்கே தொடர்ச்சி மலையில் 1733ல் கட்டப்பட்ட செண்பகவல்லி தடுப்பணை, கன்னியா மதகு கால்வாய் தடுப்புச் சுவர் என்றும் அழைக்கப்படுகிறது. இது 1450 மீட்டர் நீளமும், 2 மீட்டர் உயரமும் கொண்டது. அன்றைய சிவகிரி ஜமீன்தாருக்கும் திருவாங்கூர் மன்னருக்கும் ஏற்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இந்த அணை கட்டப்பட்டது. கன்னியா மதகு கால்வாயில் 1955ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்டது. அன்றைய தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் 1959 முதல் 1962 வரை இந்த உடைப்பு சரிசெய்யப்பட்டது. மீண்டும் 1964ல் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பை சரிசெய்ய கேரள அரசும் வனத்துறையும் ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். கேரள அரசு மதிப்பீடு செய்த 10.30 லட்சம் ரூபாய் மதிப்பில், 1985ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, பாதித் தொகையான 5.15 லட்சம் ரூபாயை தமிழக அரசு கேரள அரசுக்கு அனுப்பியது. ஆனால், 20 ஆண்டுகள் எந்த முயற்சியும் செய்யாத கேரள அரசு, 29-12-2005 அன்று பணத்தைத் திருப்பி அனுப்பிவிட்டது. இதையடுத்து, 2006ல் சிவகிரி வட்டாரம் ராசிங்கப்பேரி கண்மாய் விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது (WP no 1274/2006). இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், எட்டு வார காலத்திற்குள் கால்வாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகி இன்று வரை 20 ஆண்டுகள் ஆகியும் உடைப்பு சரிசெய்யப்படவில்லை.

தற்போதைய நிலை மற்றும் பாதிப்பு 

செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரிசெய்யாததால், தென்காசி மாவட்டத்தில் சிவகிரி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் வட்டாரங்கள், விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை, சாத்தூர் வட்டாரங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம், விளாத்திகுளம் வட்டாரங்கள் என  சுமார் 40,000 ஏக்கர் சாகுபடி நிலம் வளம் குன்றி கிடக்கிறது. மேலும், இந்த அணை தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.

எதிர்கால நடவடிக்கை செயல் திட்டம் 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்கால நடவடிக்கை செயல் திட்டமாக சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

  • செண்பகவல்லி தடுப்பணை முதல் வைப்பாறு கடலில் கலக்கும் இடம் வரை ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் மூன்று முதல் ஐந்து பேர் வரை அங்கமாகும் விரிவான ஒருங்கிணைப்புக் குழு உருவாக்குவது.
  • தமிழகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், "செண்பகவல்லி எங்கள் உரிமை" என்ற முழக்கத்துடன், ஜூலை 10 ஆம் தேதி தென்மலை கிராமத்தில் 10,000 விவசாயிகள் பங்கேற்கும் செண்பகவல்லி எழுச்சி மாநாடு நடத்துவது.
  • 2025 ஆகஸ்ட் 15 சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் நடைபெறும் போது, பாசனப் பகுதியில் உள்ள 100 கிராம சபைகளில் செண்பகவல்லி தீர்மானம் நிறைவேற்றுவது.
  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்துவது.
  • இரண்டு மாநிலங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், மாண்புமிகு இந்திய பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்களைச் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்துவது.
  • 2006 சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது மற்றும் உச்சநீதிமன்றம் தொடர்புடைய சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது.

கடந்த 60 ஆண்டுகளில் 13 சட்டமன்றத் தேர்தல்களும், 14 நாடாளுமன்றத் தேர்தல்களும் நடந்து முடிந்துவிட்ட நிலையில், விவசாயிகள் இவ்வளவு காலம் காத்திருப்பது போதும் என்றும், இதுவே சரியான தருணம் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.