தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Ex-union Minister Mk Alagiri Celebrates His 72rd Birthday Today

HBD MK Alagiri: மு.க.அழகிரி அஞ்சா நெஞ்சன் ஆன கதை: மதுரையில் மவுனமான வைகைப்புயல்!

Karthikeyan S HT Tamil
Jan 30, 2023 06:15 AM IST

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், திமுகவின் முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க. அழகிரிக்கு இன்று 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

மு.க.அழகிரி - கோப்புபடம்
மு.க.அழகிரி - கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

1980-களின் தொடக்கத்தில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளோடான முரசொலிக்கு மதுரை பதிப்பு தொடங்கப்பட்டது. அதை நிர்வகிக்கும் பொறுப்பை மு.க.அழகிரியிடம் ஒப்படைத்தார் கருணாநிதி. அதுநாள் வரை சென்னையில் இருந்த அழகிரி மதுரைக்கு குடும்பத்தோடு இடம்பெயர்ந்தார். அதன்பிறகு கட்சிக்காரர்கள், பொதுமக்களுடன் இயல்பாக பேசுவது, முரசொலி நிர்வாகத்தை கவனிப்பது என வலம்வரத் தொடங்கினார் அழகிரி.

தொடர்ந்து திமுகவில் அழகிரியின் பங்களிப்புக்கு பரிசாக தென்மண்டல அமைப்புச் செயலாளராக பதவி வழங்கி அழகு பார்த்தார் கருணாநிதி. மதுரை தொகுதி எம்பியாக வெற்றி பெற்று மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார் அழகிரி. அவரது ஆதரவாளர்கள் பலர் எம்எல்ஏக்களாக வெற்றி பெற்றனர். தென் மாவட்டங்களில் அஞ்சா நெஞ்சனாக இருந்த அழகிரி திருமங்கலம் இடைத்தேர்தலின் போது புது பார்முலாவை அறிமுகம் செய்து வெற்றி பெற்றார்.

மு.க.அழகிரி - கோப்புபடம்
மு.க.அழகிரி - கோப்புபடம்

இதையடுத்து தென் மாவட்ட அரசியலின் மையப்புள்ளியாக வலம் வந்தார் அழகிரி. இதனிடைய ஒரு கொலை வழக்கு தொடர்பாக திமுக பிரமுகர் மிசா பாண்டியன் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்ததை அழகிரி விரும்பவில்லை. பகிரங்கமாக எதிர்க்குரல் எழுப்பினார் மு.க.அழகிரி. இதனால் திமுக தலைவர் கருணாநிதிக்கும், அழகிரிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த விரிசல் தீவிரமடைந்ததை அடுத்து கட்சி விரோத செயல்களில் ஈடுபடுகிறார் எனக் கூறி திமுகவில் இருந்தே நீக்கப்பட்டார் மு.க.அழகிரி.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன், திமுகவின் முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளர், முன்னாள் மத்திய அமைச்சர், தன்னுடைய ஆதரவாளர்களால் அஞ்சா நெஞ்சன் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் மு.க. அழகிரி இன்று (ஜன.30) தன்னுடைய 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

மு.க. அழகிரி திமுகவில் இருந்தபோது அவரது பிறந்த நாள் என்றாலே மதுரையே திருவிழா கோலம் பூண்டிருக்கும். வீதியெங்கும் தோரணங்கள், சுவரெல்லாம் போஸ்டர்கள், திரும்பிய பக்கம் எல்லாம் பிளக்ஸ் போர்டுகள் என்று மதுரையை திக்குமுக்காட வைப்பார்கள் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள்.

திண்டுக்கல் மாநகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.
திண்டுக்கல் மாநகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.

மதுரை சத்யசாய் நகரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக ஒரு பெரும் கூட்டமே காத்திருக்கும். மேலும், நலிவடைந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மு.க.அழகிரி ஆதரவாளர்கள் அசத்துவார்கள். விழாவில் கலந்து கொண்டோருக்கு அசைவம், சைவம் விருந்து என்று அமர்க்களமாக நடக்கும்.

பேரக்குழந்தைகளுடன் மு.க.அழகிரி - காந்தி தம்பதி.
பேரக்குழந்தைகளுடன் மு.க.அழகிரி - காந்தி தம்பதி.

ஆனால், திமுகவில் இருந்து அழகிரி ஓரங்கட்டப்பட்ட பிறகு அவரது ஆதரவாளர்களில் பெரும்பாலானவர்கள், தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பக்கம் சாய்ந்தனர். அதனால், அழகிரியின் பிறந்த நாள் விழா சமீபகாலமாக வழக்கமான உற்சாகம் இன்றி காணப்பட்டது. மேலும், கருணாநிதி இறப்பு உள்ளிட்ட சில காரணங்களால் பிறந்தநாள் கொண்டாட்டங்களையும் தவிர்த்து வந்தார் மு.க.அழகிரி.

இந்த நிலையில், அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக உதயநிதி மதுரைக்கு வந்தபோது, சத்யசாய் நகரில் உள்ள மு.க.அழகிரி வீட்டுக்கே சென்று சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இதனால், அழகிரி மீண்டும் திமுகவில் இணைய வேண்டும் என்று விரும்பத் தொடங்கி விட்டனர் அவரது ஆதரவாளர்கள். 

இதை வெளிப்படுத்தும் விதமாக அழகிரியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக மதுரை, திண்டுக்கல் நகர் பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.  அதில், `தம்பி உடையான் படைக்கு அஞ்சான். அண்ணன் உடையான் தடைக்கு அஞ்சான்..’ என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. இதனால், மு.க.அழகிரி மீண்டும் திமுகவில் இணைவாரா? என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்