Exclusive: ‘I.N.D.I.A கூட்டணி பெயரை திமுக தவிர்த்தது ஏன்?’ ஆர்.எஸ்.பாரதி பிரத்யேக பேட்டி!
”தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் இணைந்து ’இந்தியா’ கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ள நிலையில் ’மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்’ என திமுக தலைமை கழகம் செய்திக்குறிப்பு”
இந்தியா கூட்டணி என்பது நாடாளுமன்றத் தேர்தலுக்குத்தான் தற்போது நடக்கும் சட்டமன்றத் தேர்துக்கானது அல்ல என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
தெலங்கானா தேர்தல்
119 சட்டமன்றத் தொகுதிகளை தெலங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் 30ஆம் தேதி அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கே.சந்திரசேகர் ராவ் முதலமைச்சராக உள்ள பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளை இடையே அங்கு மும்முனை போட்டி நிலவி வருகிறது.
காங்கிரஸ்க்கு திமுக ஆதரவு
இந்த நிலையில் தெலங்கானாவில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு அக்கட்சித்தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ”வருகிற 2023 நவம்பர் 30 அன்று தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டுமெனவும், தெலுங்கானா மாநிலக் கழக அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தேர்தல் பணிக்குழு அமைத்து, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தல் பணியாற்றி, அக்கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி
தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் இணைந்து ’இந்தியா’ கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ள நிலையில் ’மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்’ என திமுக தலைமை கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது புதிய கேள்விகளுக்கு வித்திட்டு இருந்தது.
ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
இது தொடர்பாக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டபோது, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியும் சமாஜ்வாதியும் தனித்தனியே போட்டியிடுகின்றனர். எனவே ஏற்படும் குழப்பத்தை தவிர்க்கவே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆதரவை வழங்கி உள்ளோம். கடந்த கர்நாடக தேர்தலின்போது மதசார்பற்ற கூட்டணி சார்பில்தான் ஆதரவை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கினோம்.
இந்தியா கூட்டணி என்பது நாடாளுமன்றத் தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது. எனவே இது தற்போது நடக்கும் சட்டமன்றத் தேர்தலோடு தொடர்புடையது அல்ல. இந்திய கூட்டணி தற்போது உருவாகி உள்ளதே தவிர தேர்தல் தொகுதி பங்கீடுகள் குறித்து இன்னும் பேசவில்லை. எனவே இதில் குழப்பம் ஏதும் இல்லை என தெரிவித்தார்.