’விரும்பும் கடவுள்களை வழிபடுவது ஜனநாயக உரிமை’ முருகன் மாநாடு குறித்த கேள்விக்கு ஈபிஎஸ் பதில்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’விரும்பும் கடவுள்களை வழிபடுவது ஜனநாயக உரிமை’ முருகன் மாநாடு குறித்த கேள்விக்கு ஈபிஎஸ் பதில்!

’விரும்பும் கடவுள்களை வழிபடுவது ஜனநாயக உரிமை’ முருகன் மாநாடு குறித்த கேள்விக்கு ஈபிஎஸ் பதில்!

Kathiravan V HT Tamil
Published Jun 21, 2025 11:27 AM IST

”தற்போதைய ஆட்சியில் இதுபோன்ற செயல்கள் மூலம் மக்களை மடைமாற்ற முயல்கின்றனர். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் இவர்களுக்கு தக்க பதிலளிப்பார்கள்”

’விரும்பும் கடவுள்களை வழிபடுவது ஜனநாயக உரிமை’ முருகன் மாநாடு குறித்த கேள்விக்கு ஈபிஎஸ் பதில்!
’விரும்பும் கடவுள்களை வழிபடுவது ஜனநாயக உரிமை’ முருகன் மாநாடு குறித்த கேள்விக்கு ஈபிஎஸ் பதில்!

கீழடி அகழ்வு ஆய்வு குறித்து விளக்கம்

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கீழடி அகழ்வு ஆய்வு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். “நேற்றைய தினமே, அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு. மாஃபா பாண்டியராஜன், கீழடி ஆய்வு குறித்து விரிவாக விளக்கமளித்துவிட்டார். மாண்புமிகு அம்மா ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவரது மறைவுக்குப் பின் அதிமுக அரசால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் பணிகள் குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திகள் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன,” என்றார். மீண்டும் இதே கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

மதுரை முருகன் மாநாட்டுக்கு வாழ்த்து 

மதுரையில் நடைபெறும் முருகன் மாநாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஈபிஎஸ், “ஜனநாயக நாட்டில், ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான கடவுள்களை வழிபடுவது அவர்களின் உரிமை. இந்த அடிப்படையில், மதுரையில் நடைபெறும் மாநாட்டுக்கு அதிமுக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம்,” என்றார்.

தாய்மொழி முக்கியத்துவம்

ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் விரைவில் வரும் என்று அமித்ஷா சொல்லி உள்ளது குறித்த கேள்விக்கு, “அது அவரது தனிப்பட்ட கருத்து” என்று கூறினார். தொடர்ந்து பேசிய ஈபிஎஸ், “தாய்மொழி அனைவருக்கும் மிக முக்கியம். ஆனால், தற்போது தாய் மொழியை விட  ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்ற பொருள்படும்படிதான் அமித்ஷா பேசி உள்ளார் என தெரிவித்தார். 

திமுக அரசு மீது விமர்சனம்

திமுக அரசு மற்றும் அதன் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த இபிஎஸ், “திமுகவினர் பொதுவெளியில் ஆபாசமான பேச்சுகளையும், கேலிச் சித்திரங்கள் மற்றும் அவதூறு செய்திகளையும் பரப்பி வருகின்றனர். இது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய ஆட்சியில் இதுபோன்ற செயல்கள் மூலம் மக்களை மடைமாற்ற முயல்கின்றனர். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் இவர்களுக்கு தக்க பதிலளிப்பார்கள்,” என்று எச்சரித்தார். இது தொடர்பாக ஏற்கனவே கண்டன அறிக்கை வெளியிடப்பட்டு, பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

யோகா தின வாழ்த்து 

பாரத பிரதமரின் உடல் ஆரோக்கியம் தொடர்பான முயற்சிகளைப் பாராட்டிய இபிஎஸ், “உடல் ஆரோக்கியம் மிக முக்கியமானது. இதற்காக பிரதமர் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்றார். இந்தக் கருத்தை அவர் பலமுறை வலியுறுத்தினார்.