’எனக்கு எம்பி சீட் தரவில்லை என்றாலும் திமுகவை திட்டக் கூடாது!’ மதிமுகவினருக்கு வைகோ அறிவுரை
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’எனக்கு எம்பி சீட் தரவில்லை என்றாலும் திமுகவை திட்டக் கூடாது!’ மதிமுகவினருக்கு வைகோ அறிவுரை

’எனக்கு எம்பி சீட் தரவில்லை என்றாலும் திமுகவை திட்டக் கூடாது!’ மதிமுகவினருக்கு வைகோ அறிவுரை

Kathiravan V HT Tamil
Published Apr 21, 2025 03:14 PM IST

வைகோவின் இந்த பேச்சு, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை பெறுவதற்காக திமுகவுடன் நல்லுறவை பேணுவதற்காக இருக்கலாம் என அவரது தொண்டர்கள் கருதுகின்றனர். இம்முறை குறைந்தபட்சம் 10 எம்எல்ஏக்களை சட்டமன்றத்திற்கு அனுப்பும் வகையில் செயல்பட வேண்டும் என வைகோ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

’எனக்கு எம்பி சீட் தரவில்லை என்றாலும் திமுகவை திட்டக் கூடாது!’ மதிமுகவினருக்கு வைகோ அறிவுரை
’எனக்கு எம்பி சீட் தரவில்லை என்றாலும் திமுகவை திட்டக் கூடாது!’ மதிமுகவினருக்கு வைகோ அறிவுரை

திமுகவை விமர்சிக்க கூடாது

கடந்த ஏப்ரல் 12 அன்று நடைபெற்ற மதிமுக தொழிற்சங்க பொதுக்குழு கூட்டத்தில் பேசிய வைகோ, "ஒரு மாதத்திற்குள் ராஜ்யசபா சீட் அறிவிப்பு வரும்போது, திரும்பவும் தேர்ந்தெடுக்கப்படும் பட்டியலில் என் பெயர் ஒருவேளை இல்லாவிட்டாலும், எந்த பதிவும் திமுகவை தாக்கியோ, முதலமைச்சரை விமர்சித்தோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செய்யக் கூடாது என்பதை சத்திய பிரமாணமாக நீங்கள் மனதிற்குள் உறுதிப்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும்" என்று உருக்கமாக தெரிவித்தார். மேலும், "மு.க. ஸ்டாலினுக்கு நான் பக்கபலமாக இருப்பேன் என்று கலைஞர் அவர்களிடம் உறுதி அளித்திருக்கிறேன். அந்த உறுதியை காப்பாற்ற வேண்டும்" என்றும் கூறினார்.

வைகோவின் மெகா திட்டம்

வைகோவின் இந்த பேச்சு, ராஜ்யசபா பதவியை விடுத்து, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை பெறுவதற்காக திமுகவுடன் நல்லுறவை பேணுவதற்காக இருக்கலாம் என அவரது தொண்டர்கள் கருதுகின்றனர். இம்முறை குறைந்தபட்சம் 10 எம்எல்ஏக்களை சட்டமன்றத்திற்கு அனுப்பும் வகையில் செயல்பட வேண்டும் என வைகோ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜ்யசபா எம்.பி தேர்தல்

ராஜ்ஜியசபாவில் தமிழ்நாட்டில் இருந்து 18 எம்.பிக்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இதில் 6 எம்பிக்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதி உடன் நிறைவடைகிறது. ஒருவர் மாநிலங்களவை உறுப்பினராக வெற்றி பெற 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை.

பதவி காலியாகும் எம்பிக்கள் யார்?

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவை எம்பி தேர்தலில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவின் மூத்த வழக்கறிஞர் வில்சன், தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா ஆகியோர் திமுக ஆதரவுடன் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சந்திரசேகர் ஆகியோர் அதிமுக ஆதரவுடன் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

திமுகவில் யாருக்கு வாய்ப்பு?

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில், 134 எம்.எல்.ஏக்களை கொண்ட திமுகவுக்கு 4 இடங்களும், 66 எம்.எல்.ஏக்களை வைத்து உள்ள 2 இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

திமுகவை பொறுத்தவரை மாநிலங்களவையில் பல்வேறு விவாதங்களில் கலந்து கொண்டு வலுவான வாதங்களை முன் வைத்து வரும் வில்சனுக்கு மீண்டும் எம்.பி பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளரான எம்.எம்.அப்துல்லாவுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

திமுகவின் தொழிலாளர் அமைப்பான தொமுசவுக்கு ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்குவது அக்கட்சியில் வழக்கமாக உள்ளது. தொமுசவை சேர்ந்த சண்முகம் அல்லது நடராஜன் உள்ளிட்டோரில் யாரேனும் ஒருவருக்கு ராஜ்ஜியசபா எம்பி பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைகோவின் நிலை என்ன?

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை மற்றும் மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டது, வைகோ திமுக ஆதரவுடன் மாநிலங்களவை எம்பி ஆனார். ஆனால் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு திருச்சி மக்களவை தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. துரை வைகோ போட்டியிட்டு எம்பி ஆனார். மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ‘மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து ஒப்பந்தம் போடவில்லை. அது குறித்து கேட்கவும் இல்லை’ என தெரிவித்தார்.

Kathiravan V

TwittereMail
கதிரவன் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக உள்ளார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக துறைகளில் 2016ஆம் ஆண்டு முதல் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார். அரசியல், தொழில்முனைவு, வணிகம், ஆன்மீகம் மற்றும் நாட்டு நடப்பு உள்ளிட்ட பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறார். தூசி பாலிடெக்னிக் கல்லூரியில் DME பட்டயப்படிப்பு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ அரசியல் அறிவியல், SRM பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முடித்து உள்ளார். புதிய தலைமுறை டி.வி., ஏபிபி நாடு ஆகிய முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணியாற்றி வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.