ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு: எகிறும் நாம் தமிழர் வாக்குகள்! டெபாசிட் வாங்குமா? இதோ முழு விவரம்!
Erode East Election Results: ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர். இடைத்தேர்தல் அன்று 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. டெபாசிட் பெற நாம் தமிழர் கட்சி 26 ஆயிரம் வாக்குகளை பெற வேண்டும் என்பது விதியாக உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தொடந்து முன்னிலையில் உள்ளார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகின. 44 சுயேச்சைகள் உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். திமுகவின் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.கே.சீதாலட்சுமி இடையே நேரடி போட்டி இருந்தது.
வாக்கு எண்ணும் பணிகள் தீவிரம்
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் பெருந்துறை அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகின்றது. மொத்தம் 14 மேசைகளில் வாக்கு எண்ணும் பணியில் 51 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான நூற்றுக்கணகான போலீசார் பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.