ஈரோடு தேர்தல் முடிவுகள்: ‘திமுக அமோக வெற்றி! நாம் தமிழர் கட்சி டெபாசிட் காலி!’ சீமானின் பரப்புரை புஸ்…!
வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று உள்ளது. எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்து உள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகின. 44 சுயேச்சைகள் உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். திமுகவின் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.கே.சீதாலட்சுமி இடையே நேரடி போட்டி நிலவி வந்தது.
வாக்கு எண்ணில்லை நிலவரம்
திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,14, 439 வாக்குகளை பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23,810 வாக்குகளை பெற்றார். இருவருக்கும் இடையே உள்ள வாக்குகள் வித்தியாசம் 90,629 ஆக உள்ளது. வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்து உள்ளனர்.
வி.சி.சந்திரகுமார் பேட்டி
தேர்தல் முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வி.சி.சந்திரகுமார், ‘இந்த வெற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு உரியது. திமுகவின் நல்லாட்சிக்கு மக்கள் வாக்களித்து உள்ளனர். நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விபத்திற்கு சமம். எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களும் திமுகவுக்கு வாக்கு அளித்து உள்ளனர். திமுக யாரை கண்டும் அஞ்சியது இல்லை’ என தெரிவித்தார்.
சீதாலட்சுமி பேட்டி
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி கூறுகையில், ’இது பின்னடைவு கிடையாது. பணத்திற்கான விலை போகமல் நாம் தமிழர் கட்சிக்கு மக்கள் வாக்கு அளித்து உள்ளனர். மக்களிடம் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று உள்ளது. கடந்த இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகளை விட கூடுதல் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு வரும். மக்களை சிந்திக்க வைத்ததே நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த வெற்றி. இந்த வாக்குக்கள் வரும் 2026 தேர்தலில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.’

டாபிக்ஸ்