Erode East By Election: சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. தொடங்கியது தபால் வாக்குப்பதிவு..!
Erode East By Election: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 12-D படிவம் அளித்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகள் பெற்றப்பட உள்ளது.

Erode East By Election: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 58 வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்னர். இதில், 3 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 7 சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் ஒரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சியின் மாற்று வேட்பாளர் என மொத்தம் 8 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர்.
இதனைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 47 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக அந்த தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் தெரிவித்தார். இதனிடையே சுயேச்சை வேட்பாளர் பத்மாவதி என்பவரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 46 ஆக குறைந்தது.
தபால் வாக்குப்பதிவு தொடங்கியது
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று (ஜனவரி 23) தொடங்கியது. 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகள் பெறப்படுகின்றன. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப் பெட்டிகளுடன் சென்றுள்ளனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை அதிகாரிகள் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளை பெற இருக்கின்றனர். 209 முதியவர்கள் மற்றும் 47 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 256 பேர் தபால் வாக்கு செலுத்த பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே 12-D படிவம் அளித்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் வரும் 27ம் தேதி வரை தபால் வாக்குகள் பெற்றப்பட உள்ளது.
தேர்தலை புறக்கணித்த கட்சிகள்
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இத்தேர்தலில் போட்டியிடவில்லை. தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆளும் கட்சியான திமுகவிற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே இருமுனை போட்டி உருவாகி இருக்கிறது. சமீபத்தில் பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சுக்கள் தமிழகம் முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இதன் தாக்கம் எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடையை செய்திகள்