’அதிமுக எம்.எல்.ஏக்களை பார்த்தால் பயமாக உள்ளதா?’ சபாநாயகருக்கு ஈபிஎஸ் சரமாரி கேள்வி!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி "என்ன பயமா?" என சபாநாயகரை கேள்வி எழுப்பினார். டாஸ்மாக் முறைகேடு விவகாரம் குறித்து விவாதிக்க அதிமுக உறுப்பினர்கள் முயன்றபோது, ஈ.பி.எஸ். பேச முயல, அவரது மைக் ஆஃப் செய்யப்பட்டது.

அதிமுக எம்.எல்.ஏக்கள் டாஸ்மாக் முறைகேடு குறித்து பேசுவது பயமாக உள்ளதா என சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெறுகிறது.
இதில் டாஸ்மாக் முறைகேடு குறித்து அதிமுக எம்எல்ஏக்களுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி "என்ன பயமா?" என சபாநாயகரை கேள்வி எழுப்பினார். டாஸ்மாக் முறைகேடு விவகாரம் குறித்து விவாதிக்க அதிமுக உறுப்பினர்கள் முயன்றபோது, ஈ.பி.எஸ். பேச முயல, அவரது மைக் ஆஃப் செய்யப்பட்டது. மேலும் பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததாக அதிமுகவினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதனால் அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசுவதற்கு அதிமுக சார்பில் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட இருவர் மனு அளித்திருந்ததாகவும், எனவே எதிர்க்கட்சித் தலைவர் தனிப்பட்ட முறையில் பேச முடியாது எனவும் சபாநாயகர் மற்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தனர். இது நியாயமற்றது எனக் கூறி, ஈ.பி.எஸ். தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
"எங்களுக்கு எந்த பயமும் இல்லை" என்ற சபாநாயகரின் பதிலை ஏற்காமல், டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தை பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள், வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவை வளாகத்தில், "தமிழ்நாட்டில் ஜனநாயகம் செத்து போச்சு", "மக்கள் பிரச்சனைகளை எங்கே பேசுவது?" என முழக்கமிட்டனர். மேலும், அமலாக்கத்துறை சோதனைகள் உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளை பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
