Ponmudi: அபாச பேச்சு எதிரொலி! பொன்முடிக்கு எதிராக வளர்மதி, கோகுல இந்திராவை களமிறக்கும் ஈபிஎஸ்!
பொன்முடியின் சமீபத்திய பேச்சு, தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக பெண்களின் மனங்களில் பெரும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னர் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த இவரது இத்தகைய கீழ்த்தரமான பேச்சு, தமிழ்நாட்டின் பண்பாட்டையும், அரசியல் நாகரிகத்தையும் அவமதித்துள்ளது.

அமைச்சர் பொன்முடியின் பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுக்கு எதிராக அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
வக்ரத்தின் உச்சம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்ப் பண்பாட்டில் பெண்களுக்கு அளிக்கப்படும் மாண்பையும், மகத்துவத்தையும் அளவிட முடியாதவை என்பதை உணர்ந்து, பெண்களை அறிவின் உருவாகவும், ஆற்றலின் வடிவமாகவும், தாய்மையின் இலக்கணமாகவும் போற்றி வருகிறது தமிழ் சமூகம். ஆனால், விடியா திமுக அரசின் வனத்துறை அமைச்சர் பொன்முடி, சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், சைவ மற்றும் வைணவ சமயங்களின் குறியீடுகளை தொடர்புபடுத்தி, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் மிகவும் கீழ்த்தரமாகவும், ஆபாசமாகவும் பேசியுள்ளார். இவரது பேச்சு, மனித மனதில் இருக்கக் கூடாத வக்கிரத்தின் உச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.
பெண்கள் மனதில் வேதனை
திமுகவின் வரலாறு முழுவதும் அநாகரிகமான பேச்சுகளும், அரசியல் மேடைகளில் நாகரிகத்தை அழித்து, பெண்களையும், சமயங்களையும், மக்களின் நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்தும் செயல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில், அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு, தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக பெண்களின் மனங்களில் பெரும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னர் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த இவரது இத்தகைய கீழ்த்தரமான பேச்சு, தமிழ்நாட்டின் பண்பாட்டையும், அரசியல் நாகரிகத்தையும் அவமதித்துள்ளது.
