’பரோட்டா கடை முதல் பேன்சி ஸ்டோர் வரை வணிகர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துவிட்டது!’ ஈபிஎஸ் கடும் தாக்கு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’பரோட்டா கடை முதல் பேன்சி ஸ்டோர் வரை வணிகர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துவிட்டது!’ ஈபிஎஸ் கடும் தாக்கு!

’பரோட்டா கடை முதல் பேன்சி ஸ்டோர் வரை வணிகர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துவிட்டது!’ ஈபிஎஸ் கடும் தாக்கு!

Kathiravan V HT Tamil
Published May 05, 2025 01:26 PM IST

“சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து அதிமுக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தது, ஆனால் ஆதரவாக திமுக வாக்களித்ததை ஈபிஎஸ் நினைவுக்கூர்ந்தார்”

’பரோட்டா கடை முதல் பேன்சி ஸ்டோர் வரை வணிகர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துவிட்டது!’ ஈபிஎஸ் கடும் தாக்கு!
’பரோட்டா கடை முதல் பேன்சி ஸ்டோர் வரை வணிகர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துவிட்டது!’ ஈபிஎஸ் கடும் தாக்கு!

மறைமலைநகரில் மாநாடு

மறைமலை நகரில் கொளத்தூர் ரவி தலைமையில் நடந்த தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரவையின் 42-வது வணிகர் தின விழா மற்றும் வணிக பாதுகாப்பு மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த அவர், வணிகர்களின் நலனைப் பாதுகாக்க அதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும் என வாக்குறுதி அளித்தார்.

வணிகர்கள் பொருளாதார முதுகெலும்பு

வணிகர்களை “நாட்டின் பொருளாதார முதுகெலும்பு” எனப் புகழ்ந்த ஈபிஎஸ், விவசாயிகளின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளின் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வணிகர்கள் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறினார். “இரத்தக் குழாய்கள் உடலுக்கு சக்தி அளிப்பது போல, அனைத்து மக்களுக்கு தேவைப்படும் தேவையை பூர்த்தி செய்து வணிகர்கள் நாட்டின் பொருளாதார சக்கரத்தை சுழல வைக்கின்றனர்,” என்றார்.

தமிழக வணிகர்களின் பாரம்பரியம்

பண்டைய காலத்தில் தமிழக வணிகர்கள் கிரேக்கம், ரோமாபுரி, அரபு, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் வியாபாரம் செய்து உலகப் புகழ் பெற்றதை சங்க இலக்கியங்கள் மற்றும் செப்பேடுகள் மூலம் அறியலாம் எனக் குறிப்பிட்டார். சீன தூதர் யுவான் சுவாங், தமிழக வணிகத் திறனைக் கற்றறிய இந்தியா வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அதிமுகவின் ஆதரவு:

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் வணிகர் நலனில் அக்கறை கொண்டவர்கள் எனக் குறிப்பிட்ட ஈபிஎஸ், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து அதிமுக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்ததை நினைவுகூர்ந்தார். ஜெயலலிதா ஆட்சியில், வணிகர்களின் கோரிக்கையை ஏற்று இரவு 10 மணிக்கு மேல் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

திமுக மீது விமர்சனம்

திமுக ஆட்சியில் வணிகர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் குற்றம்சாட்டிய ஈபிஎஸ், கஞ்சா போதை கும்பலால் வணிகர்கள் தாக்கப்படுவதையும், ஆளுங்கட்சியினரால் “மாமூல்” வசூலிக்கப்படுவதையும், பூட்டிய கடைகளில் கொள்ளையடிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார். “திமுக ஆட்சி வணிகர்களுக்கு எதிரானது. சமூக விரோதிகளால் தாக்கப்படும் சம்பவங்கள் இந்த ஆட்சியில் அதிகரித்துள்ளன,” என்றார். மேலும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாக திமுக வாக்களித்ததை வணிகர் சமூகம் மறக்காது என விமர்சித்தார்.

"வணிகர்கள் அவர்களது வணிக நிறுவனங்களில் அடிக்கடி தாக்கப்படுவதை ஊடகத்திலேயும், பத்திரிகையிலேயும் பார்க்கிறோம். இந்த தாக்கப்படுகின்ற சம்பவம் எதனால் ஏற்படுகிறது என்று பார்க்கின்ற பொழுது, கஞ்சா போதை அந்த கும்பலால் இந்த வன்முறை ஏற்படுகின்றது."

"ஆளுங்கட்சினரால் மாமூல் வியாபாரிகளிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. பூட்டி இருக்கும் கடைகளில் இந்த ஆட்சியில் கொள்ளை போவது தொடர்கதையாக இருந்து கொண்டிருக்கின்றது."

"சரியான பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை காரணமென்று உள்நோக்கத்துடன், அரசு அலுவலர்கள் வணிக நேரத்தில் தொடர்ந்து ஆய்வு என்ற பெயரில் வியாபாரிகளை துன்புறுத்துவது என்று ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் வருகின்ற செய்திகளை பார்க்கின்ற பொழுது வேதனையாக இருக்கின்றது."

"திமுக ஆட்சி எப்பொழுதெல்லாம் வருகின்றதோ, அப்பொழுதெல்லாம் சமூக விரோதிகளால் வணிகர்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. விழுப்புரத்தில் பேன்ஸ் ஸ்டோரில் போதை ஆசாமி தடுத்த வியாபாரியை கொலை செய்தது, கஞ்சா போதை ஆசாமிகள் கடையிலே நுழைந்து வணிகர்களை தாக்குவது இதனால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் போன்ற ஒரு சில நகரங்களில் வணிகர்கள் சமூக விரோதிகளால் தாக்குவதை தடுக்க தவறிய அரசுதான் இந்த திமுக அரசாங்கம்" என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஜிஎஸ்டி மற்றும் வணிகர் நலன்

ஜெயலலிதா ஆட்சியில், ஜிஎஸ்டி குறித்து வணிகர்களின் கருத்துகளை முன்வைத்து, 39 சரக்குகள் மற்றும் 11 சேவைகளுக்கு வரிவிலக்கு மற்றும் வரிக்குறைப்பு பெறப்பட்டதாக ஈபிஎஸ் குறிப்பிட்டார். 24 மணி நேர ஹெல்ப் டெஸ்க் அமைக்கப்பட்டு, கொரோனா காலத்தில் வணிகர்களுக்கு ரூ.2000 நிவாரணமும், ஆயிரக்கணக்கான தள்ளுவண்டி வணிகர்களுக்கு உரிமமும் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வணிகர்களுக்கு வாக்குறுதி

சுதேசி வணிக நிறுவனங்களுக்கு வரிவிலக்கு, நேர்மையாக வரி செலுத்தும் வணிகர்களுக்கு அரசு கௌரவம், அபராதங்களை நியாயப்படுத்துதல், அதிகாரிகளின் துன்புறுத்தல்களை தடுத்தல் ஆகியவற்றை அதிமுக ஆட்சியில் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். “வணிகர்களின் ஒற்றுமையால் கார்ப்பரேட் மற்றும் அந்நிய நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியும்,” என்றார்.

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு

“ஸ்டாலின் மாடல் அரசு மக்கள் விரோதமானது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக, வணிகர்கள் மீது பழி சுமத்துகிறது,” என விமர்சித்த ஈபிஎஸ், வணிகர்களை ஒற்றுமையுடன் செயல்பட்டு திமுக ஆட்சியை அகற்ற ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். திமுக ஆட்சியில் வணிகர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை வன்மையாக கண்டித்த ஈபிஎஸ், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிறு வணிகர்களுக்கு முழு காவல் மற்றும் சட்ட பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதியளித்தார்.