ED Raid: அடுத்த செந்தில் பாலாஜி ஆகிறாரா துரைமுருகன்! சொந்த வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சீனிவாசன் வீட்டில் 11 கோடி ரூபாயை வருமான வரித்துறை கைப்பற்றி இருந்தது. சோதனை நடைபெறு இடங்களில் சி.ஆர்.பி.எஃப் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி, காந்தி நகரில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் ஆகியோர் வசிக்கும் இல்லத்தில் 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். சோதனை நடைபெறும் இடங்களில் சி.ஆர்.பி.எஃப் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இது மட்டுமின்றி அமைச்சர் துரைமுருகனுக்கு தொடர்பு உடைய கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும் சோதனைகள் நடைபெறுகின்றது. மேலும் திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோரின் வீடுகளிலும் இந்த சோதனை நடக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சீனிவாசன் வீட்டில் 11 கோடி ரூபாயை வருமான வரித்துறை கைப்பற்றி இருந்தது. இதனால் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் பூஞ்சோலை சீனிவாசனிடம் தொடர் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டில் இந்த வழக்கில் 2 வாகனங்களில் வந்த 6க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பூஞ்சோலை சீனிவாசனிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் துரைமுருகன் அவசர ஆலோசனை
தனது சொந்த ஊரில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் அமைச்சர் துரைமுருகன், வழக்கறிஞர்கள் உடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
2019 நாடாளுமன்றத் தேர்தல்! நடந்தது என்ன?
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற இருந்த தேர்தல் பணம் பறிமுதல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு, ஏப்ரல் 18 தேதி அன்று தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக - பாஜக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சியின் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
இந்த நிலையில் துரைமுருகன் மற்றும் பூஞ்சோலை சீனிவாசன் ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதன் எதிரொலியாக வேலூர் மக்களவைத் தொகுதியில் நடந்த தேர்தலைரத்து செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது.
இதனை அடுத்து ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலில், திமுகவின் டி.எம். கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் ஏ.சி.சண்முகத்தை தோற்கடித்து வெற்றி பெற்றார்.