AIADMK : அதிமுக உட்கட்சி விவகாரம்.. தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
AIADMK : அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம். முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னைஉயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரட்டை இல்லை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம். உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமியின் மனு தள்ளுபடி செய்தது.
எடப்பாடி பழனிச்சாமி மனு
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது எனவும், உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்து அனுப்பப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்க கோரி முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் மற்றும் ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வு, தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையம், சின்ன ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் விசாரணையை தொடர அனுமதித்த நீதிபதிகள், மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து திருப்தியடைந்த பிறகே விசாரணையை துவங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். மேலும், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்புடையை செய்திகள்