மாணவர்கள் டிவி, செல்போன் பார்ப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும் - அன்பில் மகேஷ்
மாணவச் செல்வங்கள் அறிவாளிகளாக இருக்கிறீர்கள் என்பதை விட நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்
திருச்சி : மணப்பாறையை அடுத்த தொப்பநாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் சடையம்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதையடுத்து மாணவர்களுக்கு மத்தியில் பேசிய அவர்,"மாணவ, மாணவிகள் அனைவரின் கவனமும் படிப்பு, படிப்பு, படிப்பு என்பதில் தான் இருக்க வேண்டும், வெளியில் கூட விளையாட செல்லுங்கள் ஆனால் வீட்டில் இருந்து கொண்டு டிவி பார்ப்பது, செல்போன் பார்ப்பது ஆகியவற்றை முற்றிலுமாக கைவிட வேண்டும்.
புத்தக வாசிப்பை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும், பள்ளியில் பெரியவர்கள் சிறியவர்கள் என்பதெல்லாம் கிடையாது அனைவரும் குழந்தைகள் தான்.
மாணவச் செல்வங்கள் அறிவாளிகளாக இருக்கிறீர்கள் என்பதை விட நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதைத் தான் எண்ணுகிறோம். அதை கண்டிப்பாக செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆசிரியர்கள் என்பது பாதி பெற்றோர்களாக இருக்க வேண்டும், பெற்றோர்கள் என்பது பாதி ஆசிரியர்களாக இருக்க வேண்டும், ஆசிரியர்கள் உங்களை கண்டிப்பது நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான்.
நீங்கள் வாழ்வின் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் தன்னலம் இல்லாத ஒரு இனம் உண்டு என்றால் அது ஆசிரிய இனம் தான் என்பதை உணர வேண்டும்" என்று கூறினார்.