‘போலீஸூக்கு தண்டனை கொடுக்கும் ஸ்டாலின் அரசுக்கு மரண அடி’ ஆலங்குடியில் எடப்பாடி ஆவேசம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘போலீஸூக்கு தண்டனை கொடுக்கும் ஸ்டாலின் அரசுக்கு மரண அடி’ ஆலங்குடியில் எடப்பாடி ஆவேசம்!

‘போலீஸூக்கு தண்டனை கொடுக்கும் ஸ்டாலின் அரசுக்கு மரண அடி’ ஆலங்குடியில் எடப்பாடி ஆவேசம்!

HT Tamil HT Tamil Published Jul 24, 2025 10:14 PM IST
HT Tamil HT Tamil
Published Jul 24, 2025 10:14 PM IST

ஸ்டாலின் முதல்வராகி 50 மாதம் ஆகிவிட்டது. ஏதாவது செய்தார்களா? இங்கு அமைச்சர் ஒருவர் இருக்கிறார். இந்த அமைச்சர் ஒரு பகுதிக்குப் போயிருக்கார், அங்கு கலால் டிஎஸ்பி சுந்தரேசன் வாகனம் கேட்டார், அதை பறித்துள்ளனர், பணி செய்யவிடாமல் தடுத்து நேர்மையான அதிகாரியை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள்.

‘போலீஸூக்கு தண்டனை கொடுக்கும் ஸ்டாலின் அரசுக்கு மரண அடி’ ஆலங்குடியில் எடப்பாடி ஆவேசம்!
‘போலீஸூக்கு தண்டனை கொடுக்கும் ஸ்டாலின் அரசுக்கு மரண அடி’ ஆலங்குடியில் எடப்பாடி ஆவேசம்!

ஆலங்குடிக்குச் செல்லும் வழியில் மாத்தூரில் குவிந்திருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்ததும், பேருந்தின் உள்ளிருந்தே பேசத் தொடங்கினார் இபிஎஸ். “இந்தப் பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. எனவே அதிமுக அரசு இருக்கும்போது காவிரி - குண்டாறு திட்டம் கொண்டுவந்தோம். அதற்கு முதல்கட்டமாக 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. திமுக அரசு அந்தத் திட்டத்தை முடக்கிவிட்டது. மீண்டும் அதிமுக அரசு அமைந்தவுடன் இத்திட்டம் தொடங்கப்படும். விவசாயத் தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள், மாடுகள், ஆடுகள், பல திட்டங்கள் கொண்டுவந்தோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளுக்கான தேவையான திட்டங்கள் கொண்டுவந்து சேர்ப்போம்’’ என்று உறுதி அளித்துக் கிளம்பினார்.

அடுத்ததாக ஆலங்குடி - புதுப்பட்டி-கறம்பக்குடி சாலையில் மக்களை சந்தித்த இபிஎஸ், “இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது, எதிரிகளுக்கு நம்மை எதிர்க்க சக்தியில்லை என்பதை உணர்வார்கள். ஸ்டாலின் பகல்கனவு காண்கிறார் 200 தொகுதிகளை திமுக கூட்டணி வெல்லும் என்று நினைக்கிறார். ஸ்டாலின் அவர்களே எங்கிருந்தாலும் டிவியில் ஆலங்குடி மக்களின் எழுச்சியைப் பாருங்கள். அதிமுக கூட்டணி 210 இடங்களில் வென்று வரலாற்றுச் சாதனை வெற்றி பெறும். நமது வெற்றியின் ரகசியம் இப்போதே தெரிந்துவிட்டது. இந்த கூட்டத்தை வெற்றி விழா காட்சி போலவே பார்க்கிறேன்.

ஸ்டாலின் முதல்வராகி 50 மாதம் ஆகிவிட்டது. ஏதாவது செய்தார்களா? இங்கு அமைச்சர் ஒருவர் இருக்கிறார். இந்த அமைச்சர் ஒரு பகுதிக்குப் போயிருக்கார், அங்கு கலால் டிஎஸ்பி சுந்தரேசன் வாகனம் கேட்டார், அதை பறித்துள்ளனர், பணி செய்யவிடாமல் தடுத்து நேர்மையான அதிகாரியை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். இந்த ஆட்சியின் கொடுமையைப் பாருங்கள். இன்றைய தினம் திருச்சி குற்றப்பிரிவு டிஎஸ்பி பரத் சீனிவாசன் என்பவர் மன உளைச்சலால் ராஜினாமா செய்ததாக தகவல் வந்திருக்கிறது. பயிரை வேலி காப்பது போல மக்களைக் காப்பது போலீஸ். அப்படிப்பட்ட போலீசுக்கு தண்டனை கொடுத்தால் என்னாவது? மக்கள் தான் நீதிபதி, நீங்கள்தான் அரசை தேர்வுசெய்கிறீர்கள். இப்படிப்பட்ட அரசுக்கு நீங்கள் மரண அடி கொடுக்க வேண்டும்.

கஜா புயல் இந்த பகுதியை புரட்டிப்போட்டுவிட்டது. பயிர்கள் எல்லா சேதம், பொதுமக்களின் வீடுகள் சேதம். அதிமுக அரசு ஓடோடி வந்து உதவியது. தென்னை மர விவசாயிகள் இங்கு அதிகம். அவர்களுக்கு கடும் சேதம். அம்மா அரசு, மரம் அப்புறப்படுத்த 500ரூபாயும், நிவாரணம் 600 ரூபாயும் கொடுத்தோம். 175 தென்னை மரங்களைக் கொண்ட ஒரு ஹெக்டேருக்கு 1 லட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்தோம். தென்னை மறு சாகுபடி செய்ய 72,100 ரூபாய் கொடுத்தோம்.

நான் முதல்வராக இருக்கும்போது கடும் வறட்சி ஏற்பட்டது. விவசாயிகள் பாதிப்பு 2,448 கோடி நிவாரணம் கொடுத்த ஒரே அரசாங்கம் அதிமுக அரசு. எப்போதெல்லாம் விவசாயிகளுக்கு கஷ்டம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நீக்கினோம். பயிர்க்கடன் தள்ளுபடி, மும்முனை மின்சாரம் கொடுத்தோம். விவசாயத் தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள் கொடுத்தோம். மீண்டும் அதிமுக அரசு அமைந்ததும் ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு மனை இருந்தால் வீடுகட்டி கொடுப்போம், இடம் இல்லையென்றால் இடத்தை வாங்கி கான்கிரீட் வீடு கட்டிக்கொடுப்போம். வீடு இல்லாதவர்களே இருக்கக் கூடாது என்பதே அதிமுக எண்ணம்.

சட்டம், ஒழுங்கு சீர்கேடு எல்லை மீறிவிட்டது. காவல்துறையை திமுக சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை. கைகள் கட்டப்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள் அராஜகம் செய்கிறார்கள். இங்கிருக்கும் அமைச்சர் தன்னை குட்டி ராஜா போல நினைக்கிறார். அதனால்தான் போதை பொருள் அதிகம், போதை ஆசாமிகளை கைது செய்ய முடியவில்லை. நான் பலமுறை அரசுக்குச் சொன்னேன் ஆனால் அரசு செவிமடுக்கவில்லை. இப்போது போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று எல்லாம் கெட்டு குட்டிச்சுவர் ஆன பிறகு சொல்லி என்ன பிரயோஜனம்? திறமையற்ற அரசு, பொம்மை முதல்வர் ஆள்கிறார். கோட்சூட் போட்டு தினமும் போட்டோ ஷூட் வெளியிடுகிறார்.

அதிமுக அரசு 2011-21 வரை 10 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சி கொடுத்தோம். அரசின் அத்தனை துறைகளிலும் சிறப்பாக செயல்பட்ட அரசு அதிமுக அரசு. எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டதற்காக தேசிய அளவில் விருதுகள் பெற்றிருக்கிறோம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலும் விருது பெற்றுள்ளோம். உள்ளாட்சியில் மட்டும் 140 விருதுகள். திறமையான நிர்வாகம் என்பதால்தான் இத்தனை விருதுகள். திமுக அரசில் எல்லா துறைகளிலும் ஊழல். கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன். லஞ்சமின்றி எந்த வேலையும் நடப்பதில்லை.

ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்கும் சூழல் உருவாக்கியது அதிமுக அரசு. 7.5% உள் இடஒதுக்கீடு கொடுத்து 2,818 பேரை மருத்துவர் ஆக்கினோம். ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட கீரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரே பள்ளியில் 20 பெண்கள் 7.5% இடஒதுக்கீட்டில் தேர்வாகி மருத்துவர் ஆகியிருக்கிறார்கள்.

திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. வருமானம் குறைந்துவிட்டது விலை அதிகமாகிவிட்டது. இதைப் பற்றியெல்லாம் முதல்வருக்குக் கவலையில்லை. வீட்டு மக்களைப் பற்றி மட்டுமே அவருக்குக் கவலை. 17 அரசு மருத்துவக் கல்லூரி, 67 கலை கல்லூரி, 27 பாலிடெக்னிக் கல்லூரி இப்படி ஏராளமான கல்லூரிகளைத் திறந்ததன் விளைவு ஏழை எளிய மாணவர்கள் பட்டப்படிப்பு படிக்கும் சூழலை உருவாக்கினோம். உயர் கல்வி கிடைப்பதற்கு சந்தர்பத்தை உருவாக்கிக் கொடுத்தது அதிமுக அரசு. கொரோனா காலத்தில் மாணவர்களின் நலனைக் காக்க ஆல் பாஸ் போட்டோம். எங்கேயாவது ஆல்பாஸ் போட்டது உண்டா? இளைஞர்கள் மாணவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

உலக முதலீட்டாளர் மாநாடு 2015ல் நடத்தி 2.42 லட்சம் கோடி முதலீட்டுக்கு 98 ஒப்பந்தம் போட்டோம், 2019ல் 3.5 லட்சம் கோடி முதலீட்டுக்கு 304 ஒப்பந்தம் போட்டோம். இதன்மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. திமுகவும் முதலீட்டாளர் மாநாடு நடத்தியது, வெள்ளை அறிக்கை கேட்டால் கொடுக்கவில்லை. மின்கட்டணம் அதிகரித்ததால் தொழிற்சாலைகள் அண்டை மாநிலத்துக்குச் சென்றுவிட்டது.

கட்டுமானப் பொருட்கள் விலையும் உயர்ந்துவிட்டது. இனி கனவில்தான் வீடு கட்ட முடியும். திமுக அரசு இருக்கும்வரை நிஜத்தில் மக்கள் வீடுகட்ட முடியாது. கமிஷன் வாங்குவதால் விலை உயர்ந்து மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். பசுமை மாவட்டமாக மாற்ற 14 ஆயிரத்து 400 கோடியில் காவிரி-குண்டாறு திட்டம் கொண்டுவந்தோம். முதல்கட்டமாக 700 கோடி கொடுத்தோம். இந்த ஆட்சியில் அந்த திட்டத்தைக் கிடப்பில் போட்டனர். மேட்டூர் அணை நிரம்பி கடலில் நீர் கலக்கிறது, காவிரி-குண்டாறு நிறைவேற்றப்பட்டிருந்தால் திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பயன் பெற்றிருக்கும். மீண்டும் அதிமுக அரசு மலரும் இம்மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றுவோம்.

குடிநீர் 800 அடி தோண்டினால் தான் தண்ணீர் கிடைக்கும். அதனால் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டுவந்தோம், இந்த ஆட்சியில் எதையும் முறையாக கவனிக்கவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சி வந்ததும் 2306 கிராமங்களுக்கு குடிநீர் தங்குதடையின்றி வழங்கப்படும்.

ஜல்லிக்கட்டு போட்டி இங்குதான் அதிகம். உலக அளவில் புகழ். ஜல்லிக்கட்டு வீரர்கள் நிறைந்த பகுதி. அதிமுக ஆட்சி அமைந்ததும் அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பல்வேறு புதிய சலுகைகள் வழங்கப்படும். பொங்கல் தொகுப்பு 2500 ரூபாய் கொடுத்தோம். தீபாவளி அன்று அதிமுக ஆட்சி அமைந்ததும் சேலை வழங்கப்படும்.

உங்களுடன் ஸ்டாலின் என்று நோட்டீஸ் எடுத்துக்கொண்டு வருகிறார். 46 பிரச்னைகளை 45 நாளில் தீர்ப்பாராம். யாரோ ஐடியா கொடுத்திருக்காங்க. 46 பிரச்னை இருப்பது நான்காண்டு காலம் தெரியாதா? தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற இந்தத் திட்டம் தொடங்கியிருக்கிறார்கள். மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள். 525 தேர்தல் வாக்குறுதிகளில் எதை நிறைவேற்றினார்கள்.

ஆலங்குடி கலிபுல்லா நகர், நெட்டுக்குத்து கரை பகுதியில் வாழும் மக்களை ஆக்கிரமிப்பு என்று சொல்லி குடியிருப்புகளை அகற்ற முயற்சி நடக்கிறது. அதிமுக அரசு அமைந்ததும் அவர்கள் வசிக்கும் இடம் அவர்களுக்கே வழங்கப்படும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். ஸ்டாலின் மாடல் அரசு ஃபெயிலியர் மாடல் அரசாகிவிட்டது. பைபை ஸ்டாலின்” என்று த்ன்னுடைய பேச்சை முடித்தார்.