ஈபிஎஸின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” சுற்றுப்பயணம் நாளை கோவையில் தொடக்கம்!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னேற்பாடாக அமைகிறது. முதல் கட்டமாக, ஜூலை 7 முதல் 21 வரை கோயம்புத்தூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 34 தொகுதிகளை உள்ளடக்கிய பயணம் தொடங்குகிறது.

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஜூலை 7 ஆம் தேதி திங்கட்கிழமை, கோவை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த ஒருநாள் சுற்றுப்பயணத்தின் போது அவர்மொத்தம் 62 கிலோமீட்டர் தூரம் பயணிக்கவுள்ளார்.
தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற கருப்பொருளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணம் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னேற்பாடாக அமைகிறது. முதல் கட்டமாக, ஜூலை 7 முதல் 21 வரை கோயம்புத்தூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 34 தொகுதிகளை உள்ளடக்கிய பயணம் தொடங்குகிறது. இந்த பயணத்தின் மூலம், திமுக ஆட்சியின் குறைபாடுகளை எடுத்துரைத்து, அமைதி, வளர்ச்சி, மற்றும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுப்பதாக அமையும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். இந்த பயணத்தின், இலச்சினை மற்றும் பிரச்சாரப் பாடல் ஜூலை 5 அன்று சென்னையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் வெளியிடப்பட்டன.
அவரது சுற்றுப்பயணம் காலை 09:00 மணிக்கு மேட்டுப்பாளையம் தொகுதியில் உள்ள தேக்கம்பட்டி வான பத்திரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாட்டுடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, காலை 10:30 மணிக்கு தேக்கம்பட்டி சாலை மண்டபத்தில் விவசாயிகளைச் சந்தித்து உரையாடுகிறார். பகல் 12:30 மணிக்கு பிளாக் தண்டார் பகுதியில் மதிய உணவை முடித்துக்கொள்கிறார்.