தயிர் பாக்கெட்டுக்களில் இந்தி வார்த்தை! ஈபிஎஸ் பதில் சொல்ல மறுப்பு!
தமிழகத்தில் எது கிடைக்கிறதோ இல்லையோ கஞ்சா தாராளமாக கிடைக்கிறது என ஈபிஎஸ் பேட்டி
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக்கோரிக்கை இன்று நடைபெற்ற நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்
ட்ரெண்டிங் செய்திகள்
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பில் 27 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டதாக சொல்லி உள்ளார்கள், அவரே ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டார் அதில் மொத்தம் 1704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும், அதிலே 1167 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டவை என்று அவரே தெளிவுப்படுத்தி இருக்கிறார்.
இதன்படி 68 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த உண்மையை மறைத்து வேண்டுமென்ற திட்டமிட்டு அதிமுக ஆட்சியில் எந்த பணியும் நடக்கவில்லை என்ற தவறான செய்தியை சொல்லி உள்ளார்.
அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அட்சய பாத்திரம் திட்டத்தின் கீழ் முதன்முறையாக காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
சட்டம் ஒழுங்கு அடியோடி சீர்குலைந்துவிட்டது, கஞ்சா அனைத்து பகுதிகளிலும் கிடைக்கிறது. ஆனால் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றால் அதை அப்படியே மறைத்து பேசுகிறார்கள்
அதிமுக பெரம்பூர் பகுதி செயலாளரை 5 பேர் கஞ்சா போதையில் வெட்டிக்கொலை செய்துள்ளார்கள் ஆனால் முதல்வர் முன்விரோதம் காரணமாக நடந்தது என முதல்வர் சொல்கிறார்.
விழுப்புரத்தில் திமுகவை சேர்ந்த 2 பேர் போதையில் ஒரு கடையில் ரகளை செய்து கொண்டிருக்கிறார். முகமது ராஜா என்கிற முகமது இப்ரஹிம் என்பவர் சமாதானம் செய்ய முயன்ற போது ராஜசேகர், வல்லரசு ஆகியோர் கத்தியால் குத்தி கஞ்சா போதையில் கொலை செய்துள்ளார்கள்.
தமிழகத்தில் எது கிடைக்கிறதோ இல்லையோ கஞ்சா தாராளமாக கிடைக்கிறது.
கேள்வி:- அட்சயபாத்திரம் திட்டத்தில் ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட 5 கோடி பணத்தில் முறைகேடு நடந்துள்ளதாக நிதியமைச்சர் குற்றம்சாட்டி உள்ளாரே?
மேதகு ஆளுநரை பற்றி விமர்சனமே செய்யக்கூடாது. இதுதான் மரபு; என்னை பொறுத்தவரை மரபை நாங்கள் கடைப்பிடிக்கிறோம்.
ஆளுநருக்கு தனி அதிகாரம் உள்ளது. அதற்காக ஒரு குறிப்பிட்டத் தொகை அனுப்பப்பட்டு வந்தது. அதனை உயர்த்தி கொடுத்துள்ளோம். கடந்த ஆண்டு கூட இதே அரசு 5 கோடி கொடுத்துள்ளது. மேதகு ஆளுநர் நலத்திட்டத்திற்காகத்தான் இந்த பணத்தை கொடுத்துள்ளார்.
கேள்வி:- அம்மா உணவகம் குறித்து ஆதாரம் கொடுத்தால் பதில் சொல்வதாக முதல்வர் சொல்லி உள்ளாரே?
இதில் என்ன ஆதாரத்தை திரட்ட முடியும்? அதிமுக ஆட்சியில் ருசியாக சமைக்க தேவையான பொருட்களை தடையில்லாமல் கொடுத்தோம்; ஆட்களை குறைத்துவிட்டார்கள். ருசியில்லாத தரமில்லாத பொருட்களை கொடுப்பதால்தான் அங்கு வருகை குறைந்துவிட்டது.
கேள்வி:- அதிமுக கூட்டணி தொடரும் என்று அமித்ஷா பேசி உள்ளாரே?
நாங்கள் இல்லை என்று சொல்லவில்லையே ஆரம்பத்தில் இருந்து அதிமுக பாஜக கூட்டணியில் உள்ளது என்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவோடுதான் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்.
கேள்வி:- தயிர் பாக்கெட்டுகளில் இந்தி வார்த்தையை எழுத சொல்லி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதே?
அது பற்றி எனக்கு முழு விவரம் தெரியாததால் அது குறித்து கருத்து சொல்ல இயலாது.
கேள்வி:- எதிர்க்கட்சித் துணைத் தலைவரை மாற்றுவது தொடர்பாக சபாநாயகரிடம் வைத்த கோரிக்கை எந்த அளவில் உள்ளது?
எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக நாங்கள் ஏற்கெனவே கொடுத்த கடிதத்திற்கு இன்னும் பதில் கொடுக்கவில்லை, பரிசீலிப்பதாக சொல்லி உள்ளார் இன்னும் முடிவை தெரிவிக்கவில்லை.