’டங்ஸ்டன் விவகாரத்தில் முன்பே நடவடிக்கை எடுத்து இருக்கலாம்!’ குமுறிய ஈபிஎஸ்! கலாய்த்த துரைமுருகன்!
”எப்போது பார்த்தாலும் நாங்கள் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் தமிழ்நாடு மக்கள் பாதிக்கும் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும் போது, அதை தடுத்து நிறுத்தும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்து இருக்க வேண்டும்”
![’டங்ஸ்டன் விவகாரத்தில் முன்பே நடவடிக்கை எடுத்து இருக்கலாம்!’ குமுறிய ஈபிஎஸ்! கலாய்த்த துரைமுருகன்! ’டங்ஸ்டன் விவகாரத்தில் முன்பே நடவடிக்கை எடுத்து இருக்கலாம்!’ குமுறிய ஈபிஎஸ்! கலாய்த்த துரைமுருகன்!](https://images.hindustantimes.com/tamil/img/2024/12/09/550x309/EPS_VS_DURAI_MDU__1733733234406_1733733239978.png)
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டு உள்ளது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரிட்டாப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய சுரங்கத்துறை உரிமம் வழங்கியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. இதனால் முதலமைச்சர் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியாக அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 3-10-2023 அன்று நீர்வளத்துறை அமைச்சர் எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த இரண்டு கடிதங்களில் உள்ள முழு விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை.
சுரங்கம் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறை திருத்தச்சட்டம் 2023 ஆனது கடந்த 17-08-2023 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்து உள்ளதாக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி உள்ளது. பிளாட்டினம், டங்ஸ்டன் போன்ற 20 அறியவகை கனிமங்கள் கிரிட்டிக்கல் மினரல்ஸ் என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் போது, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் முழு அழுத்தம் தந்து சட்டத்திருத்தத்தை தடுத்து நிறுத்தி இருக்கலாம். ஆனால் அதை செய்ய இந்த அரசு தவறிவிட்டது. எப்போது பார்த்தாலும் நாங்கள் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் தமிழ்நாடு மக்கள் பாதிக்கும் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும் போது, அதை தடுத்து நிறுத்தும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்து இருக்க வேண்டும். ஆனால் அந்த பணியை அவர்கள் செய்ய தவறிவிட்டனர் என குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “மத்திய அரசிடம் இருந்து இந்த திருத்த சட்ட முன்வடிவு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு கருத்து கேட்கும் போதே, அப்போதே தமிழக அரசின் எதிர்ப்பை திட்டவட்டமாக தெரிவித்து உள்ளோம். மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், கிரிட்டிக்கல் மினரல்ஸ் என்ற போர்வையில் ஒன்றிய அரசு சுரங்க பணிகளை செய்யும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது என தெரிவித்து உள்ளோம். அனால் நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு உள்ள பெரும்பான்மை அடிப்படையில் அதை நிறைவேற்றி உள்ளனர்.”
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ”தமிழக அரசு எழுதிய கடிதத்தில் என்ன இருந்தது என்பது எங்களுக்கு எப்படி தெரியும். சொன்னால்தானே விவரம் தெரியும். அரசு வெளியிட்டால்தான் அதன் விவரம் தெரியும்” என்றார்.
இதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர்கள் அனுபவம் மிக்கவர். முதலமைச்சராகவும், அமைச்சராகவும் இருந்தவர். நீங்கள் முதலமைச்சராக இருந்த போது மத்திய சர்க்காருக்கு எத்தனையோ கடிதங்களை எழுதி உள்ளீர்கள். அதில் ஒன்றாவது எங்களுக்கு கொடுத்து உள்ளீர்களா? என கேள்வி எழுப்பினார்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)