EPS VS MKS: ’அன்னைக்கு ஆ, ஊ என்று பேசுனீங்களே! இன்னைக்கு என்ன ஆச்சு’ ஸ்டாலினை விளாசும் ஈபிஎஸ்! இதான் விஷயமா?
தூங்குபவர்களை எழுப்பலாம்; கும்பகர்ணன் போல் தூங்குவதாக நடிப்பவர்களை எழுப்ப முடியாது ! உண்மை மீண்டும் அம்பலப்பட்டு இருக்கிறது. மேலூர் மக்களுக்கு திமுக அரசு இழைத்துள்ள இந்த மாபெரும் துரோகத்திற்கு திரு.ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் விவகாரத்தில் தமிழக அரசு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள விளக்கம், விடியா திமுக அரசின் பொய்களை, நாடகங்களை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. 03.10.2023 அன்று திமுக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் எழுதிய கடிதத்தில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்காமல், மாறாக, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் விடும் உரிமை மாநில அரசுக்கே வழங்கவேண்டும் என கோரியுள்ளதை மத்திய அரசு அம்பலப்படுத்தியுள்ளது.
மாநில அரசிடம் இருந்து எந்தவித எதிர்ப்பும் வரவில்லை
மேலும், பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு நாயக்கர்பட்டி சுரங்கத்திற்கான நில தரவுகளை அனுப்பிய திமுக அரசு, ஏலம் நடத்த எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை எனவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், "2024 பிப்ரவரியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் தொடங்கியது முதல் 07.11.2024 அன்று ஏல முடிவு அறிவிக்கும் வரை மாநில அரசிடம் இருந்து எந்தவித எதிர்ப்பும் வரவில்லை" என்று மீண்டும் ஒரு முறை மத்திய அரசு கூறியுள்ளது.
10 மாதங்களில் ஒருமுறை கூட எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?
இதற்கு இடைப்பட்ட 10 மாதங்களில் ஒருமுறை கூட எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? இதைத் தான் சட்டமன்றத்திலும், ஊடகங்கள் வாயிலாகவும் தொடர்ந்து நான் சுட்டிக்காட்டி "10 மாதங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அரசாங்கம் தானே நடத்துறீங்க?" என்று விடியா திமுக அரசை நோக்கி கேட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால், இதுவரை எந்த பதிலையும் சொல்லாமல், சட்டமன்றத்தில் ஆ, ஊ என்று அமைச்சர் பதற்றத்தில் பேசியும், முதல்வர் திரு.ஸ்டாலின் மடைமாற்ற அரசியலும் மட்டுமே செய்து வந்தனர்.
தூங்குவதாக நடிப்பவர்களை எழுப்ப முடியாது!
தூங்குபவர்களை எழுப்பலாம்; கும்பகர்ணன் போல் தூங்குவதாக நடிப்பவர்களை எழுப்ப முடியாது! உண்மை மீண்டும் அம்பலப்பட்டு இருக்கிறது. மேலூர் மக்களுக்கு திமுக அரசு இழைத்துள்ள இந்த மாபெரும் துரோகத்திற்கு திரு.ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.