ECR Incident: மூன்று பேர் தலைமறைவு.. இளைஞர்கள் துரத்திய காரில் திமுக கொடி வந்தது எப்படி? போலீசார் விளக்கம்
ECR Incident: சென்னை ஈசிஆர் சாலையில் பெண்களை துரத்திய இளைஞர்கள் காரில் திமுக கொடி இருந்தது தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் தலைமறைவாக இருப்பதாகவும் அவர்கள் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்ற பெண்களை மற்றொரு காரில் இருந்த நபர்கள் துரத்தும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சமூகவலைதளத்தில் வீடியோ வெளியாகி வைரலாகியது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் பெண்களை அச்சுறுத்திய இளைஞர்களின் காரில் திமுக கொடி இடம்பிடித்திருந்தது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.
திமுக கொடி பொருந்திய காரால் சர்ச்சை
கடந்த 25ஆம் தேதி நள்ளிரவு பெண் மருத்துவர் ஒருவர் குடும்பத்துடன் முட்டுக்காடு பகுதிக்கு காரில் சென்றிருந்தார். அங்கு ஏற்கனவே நின்றிருந்த இரண்டு கார்களில் இருந்த இளைஞர்கள் பெண்களை அச்சுறுத்துவது போல வந்ததாக கூறப்படும் நிலையில், பெண்கள் தங்கள் காரில் உடனடியாக கிளம்பியுள்ளனர். இருப்பினும் அந்த இளைஞர்கள் திமுக கொடி பொருத்திய காரில் பின் தொடர்ந்து, பெண்களை துரத்திச் சென்றுள்ளனர் என சொல்லப்படுகிறது.
இந்த விவகாரத்தில் பெண்கள் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் கானத்தூர் காவல் நிலைய போலீசார் பெண் வன்கொடுமை சட்டம், தடுத்தல், மிரட்டல், சொத்தை சேதபடுத்துவது, உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக சில இளைஞர்களும் கைது செய்யப்பட்டு, காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெண்களை துரத்தும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும், இளம்பெண்களை காரில் துரத்தியது யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை
இந்த சம்பவத்தில் இளைஞர்கள் பயன்படுத்திய காரில் திமுக கொடி இடம்பெற்றது எப்படி என்பது குறித்து பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக கானத்தூர் காவல் நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, "கடந்த 25ம் தேதி அதிகாலை 3 மணிக்கு இந்த சம்பவம் நடந்திருக்கிறது. புகார் வந்த உடன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அந்தப் பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கல்லூரி மாணவர்கள் பயன்படுத்திய கார்
காரின் பதிவு எண்கள் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில், காரின் உண்மையான உரிமையாளர் அதனை விற்பனை செய்து விட்டதாகவும், பல கைகள் மாறி சந்துரு என்ற இளைஞர் இப்போது அந்த காரை பயன்படுத்தி வருவது தெரியவந்தது. மேலும் இன்னொரு கார் ஊட்டியைச் சேர்ந்த நபருடையதாகும். அதனை சென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இரண்டு கார்களில் வந்த 7 இளைஞர்கள் பெண்களை மிரட்டியது விசாரணையில் தெரியவந்தது. சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரில், 5 பேர் கல்லூரி மாணவர்கள், ஒருவர் முன்னாள் கல்லூரி மாணவர், அதில் ஒருவர் வெளிமாநிலத்தில் இருந்து வந்து படித்து வருகிறார்.
மூன்று பேர் தலைமறைவு
சந்தோஷ் என்ற முன்னாள் கல்லூரி மாணவர் மூலமாக சந்துருவுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர் சந்தோஷ், தமிழ்குமரன், அஸ்வின், விஷ்வேஷ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்துரு என்ற இளைஞர் மீது கடத்தல் மற்றும் மோசடி என இரண்டு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன.
வழக்கில் தொடர்புடைய 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள். இளைஞர்கள் பயன்படுத்திய இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
திமுகவுக்கும் கைதானவர்களுக்கும் தொடர்பில்லை
காரில் வந்த இளைஞர்களுக்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை. டோல்கேட்களில் கட்டணம் செலுத்துவதை தவிர்க்கவே அவ்வாறு திமுக கொடியை காரில் கட்டி வந்ததாக இளைஞர்கள் தெரிவித்தனர். மற்றபடி அவர்களுக்கு கட்சியுடன் தொடர்பில்லை" இவ்வாறு அவர் கூறினார்.
நடந்தது என்ன?
பெண்கள் பயணித்த கார் மற்றொரு காருடன் மோதியதால் அந்த சொகுசு காரில் இருந்தவர்கள் இந்த காரை துரத்தி நியாயம் கேட்டுள்ளனர். அப்போது ரிவர்ஸ் எடுக்கும்போது கார் மோதி உள்ளது. பின்பு இரு தரப்பினரும் சமாதானம் ஆகியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு அடுத்த நாள் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சி.எஸ்.ஆர். வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில் பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது விளக்கமும் அளித்துள்ளார்.
முன்னதாக, இளைஞர்கள் காரில் துரத்துவதை, மிகுந்த அச்சத்துடன் அந்த பெண்கள் மொபைலில் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனது.

தொடர்புடையை செய்திகள்