Kulasekarapattinam Dussehra: குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
ட்ரெண்டிங் செய்திகள்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். குலசை கோயிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா இன்று (செப்.26) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தையொட்டி இன்று காலை 5.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது கொடி பட்டம் வைத்து ஊர்வலம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு வேத மந்திரங்கள் ஓத, கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேகமும், தீபாரதனையும் நடைபெற்றது.
கொடியேற்றத்தை தொடர்ந்து பல்வேறு நாட்களாக விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் தங்களது கைகளில் மஞ்சள் கயிற்றாலான திருக்காப்பு அணியும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி குலசேகரன்பட்டினம் சிதம்பரேசுவரர் கோயில் கடற்கரையில் புனித நீராடிய பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர்.
திருவிழாவையொட்டி தினமும் இரவு இரவு 10 மணிக்கு அம்மன் திருவீதியுலாவும் நடக்கிறது. 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வருகிற 5 ஆம் தேதி நள்ளிரவு நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை தக்காா் சங்கர், இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் ராமசுப்ரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி., பிரவேஷ்குமார், மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் ஆகியோர் கோயில் வளாகத்தில் நேற்று ஆய்வு செய்தனர்.
டாபிக்ஸ்