DMK Vs NTK: ’சைமன் செபாஸ்டியனை செந்தமிழன் சீமான் ஆக்கியது நான்!’ நாதகவை விளாசும் ராஜீவ் காந்தி!
ஈழப்போர் உச்சத்தில் உள்ளது, தினமும் ஒருவர் போராடுகிறார்கள். வாருங்கள் போராடுவோம் என சீமானை அழைத்தேன். ஆனால் நான் என் வயிற்றுப் பிழப்புக்கு மாயாண்டி குடும்பத்தார் படத்திற்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டார்.

ஈழப்போராட்டத்தின் போது தீக்குளித்து முத்துக்குமார் இறந்தபோது, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாயாண்டி குடும்பத்தார் பட ஷூட்டிங்கில் இருந்ததாக திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணல்:-
நான் சொத்து சேர்த்துவிட்டதாக சில அவதூறுகளை பார்த்தேன். சொத்து சேர்ப்பது என்பது எல்லோருக்குமான உரிமை, வாய்ப்பு, வசதி இருந்தால் நேர்மையாக சொத்து சேர்த்துக் கொள்ளலாம். வருமானவரி கட்டிக் கொள்ளலாம். அடுத்தவனிடம் திரள்நிதி வாங்கி அதை தன் குடும்பத்தையும், வயிற்றையும் வளர்ப்பவன் ராஜீவ் காந்தி இல்லை. சைமன் செபாஸ்டியனாக இருந்து செந்தமிழனாக சீமான் மாறினாரே அவரிடம் இதை கேட்டு இருக்க வேண்டும்.
சைமன் செபாஸ்டியன் என்ற பெயரை மாற்றியது நான்!
சைமன் செபாஸ்டியன் என்ற பெயரை செந்தமிழன் என்று மாற்றினால் நன்றாக இருக்கும் என்று என்னிடம் சீமான் கேட்டார். அதை கெஜட்டில் மாற்றிக் கொண்டுத்தது நான்தான். 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் சீமான் யார் என்பது எனக்கு தெரியும். இப்போது அவருக்காக பேசும் யாருக்கும் தெரியாது. 2008ஆம் ஆண்டு இறுதியில் ஈரோடு வழக்கில் கைதாகிவிட்டு, சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் கோவை சிறையில் இருந்தனர். அப்போது சீமானை நான்தான் பெயிலில் எடுத்து வந்தேன்.
