கீழடி ஆய்வறிக்கை: மத்திய அரசுக்கு எதிராக திமுக மாணவரணி மதுரையில் ஆர்பாட்டம் அறிவிப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கீழடி ஆய்வறிக்கை: மத்திய அரசுக்கு எதிராக திமுக மாணவரணி மதுரையில் ஆர்பாட்டம் அறிவிப்பு!

கீழடி ஆய்வறிக்கை: மத்திய அரசுக்கு எதிராக திமுக மாணவரணி மதுரையில் ஆர்பாட்டம் அறிவிப்பு!

Kathiravan V HT Tamil
Published Jun 13, 2025 12:43 PM IST

”தி.மு.க. மாணவர் அணி சார்பில் வருகிற ஜூன் 18 அன்று காலை 10 மணிக்கு மதுரை வீரகனூர் சுற்றுச்சாலையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என திமுக மாணவர் அணியின் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி அறிவித்து உள்ளார்”

கீழடி ஆய்வறிக்கை: மத்திய அரசுக்கு எதிராக திமுக மாணவரணி மதுரையில் ஆர்பாட்டம் அறிவிப்பு!
கீழடி ஆய்வறிக்கை: மத்திய அரசுக்கு எதிராக திமுக மாணவரணி மதுரையில் ஆர்பாட்டம் அறிவிப்பு!

கீழடி அகழாய்வு ஆய்வு தொடர்பாக மேலும் அறிவியல் பூர்வமான தரவுகள் வேண்டும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ”கீழடி தொடர்பாக இன்னும் அதிகமான அறிவியல் பூர்வ முடிவுகள்,கூடுதல் தரவுகள், கூடுதல் சான்றுகள் மற்றும் கூடுதல் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் தேவை. ஒரே ஒரு கண்டுபிடிப்பு வரலாற்றுப் போக்கையே மாற்றிவிடும் என்பதால், மக்கள் அதை ஒரு பிராந்தியப் பெருமையாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க, இது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என கூறி இருந்தார். 

இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளன. இத நிலயில் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மறுக்கும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, தி.மு.க. மாணவர் அணி சார்பில் வருகிற ஜூன் 18 அன்று காலை 10 மணிக்கு மதுரை வீரகனூர் சுற்றுச்சாலையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என திமுக மாணவர் அணியின் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி அறிவித்து உள்ளார். 

கீழடி அகழாய்வு, தமிழர்களின் பழமையான நாகரிகத்தை அறிவியல்பூர்வமாக நிரூபித்த போதிலும், பா.ஜ.க. அரசு அதன் முடிவுகளை ஏற்க மறுப்பதாகவும், இது தமிழர் விரோதப் போக்கை வெளிப்படுத்துவதாகவும் தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது. முந்தைய அதிமுக அரசு, பா.ஜ.க.வின் அழுத்தத்தால் கீழடி ஆய்வை கிடப்பில் போட்டதாகவும், ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, அருங்காட்சியகம் அமைக்கப்பட்டதாகவும் ராஜீவ்காந்தி தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாணவர் அணியின் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பினர் பெருந்திரளாக பங்கேற்க உள்ளனர். இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி, தமிழர் பண்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்த அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ராஜீவ்காந்தி அழைப்பு விடுத்தார்.