’வெறும் 10 மாநிலங்களை வைத்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதே பாஜகவின் திட்டம்’ திமுக எம்.பி.செல்வகணபதி குற்றச்சாட்டு!
4 தென் மாநிலங்களுக்கும் சேர்த்து வெறும் 34 தொகுதிகள் மட்டும்தான் உயரும். ஆனால் விகிதாசாரப்படி பார்த்தால் 4 வடமாநிலங்களில் மட்டுமே 200க்கும் மேற்பட்ட தொகுதிகள் அதிகமாகிறது.

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் வெறும் 10 மாநிலங்களை வைத்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதே பாஜகவின் திட்டம் என சேலம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வ கணபதி குற்றம்சாட்டி உள்ளார்.
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி செய்தியாளர் சந்திப்பு:-
மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக வரும் மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை முதலமைச்சர் சென்னையில் கூட்ட உள்ளார். மக்களவை தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் முதலமைச்சர் அவர்கள் எச்சரிக்கை மணியை அடித்து உள்ளார். மறுவரையறை என்பது மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு சீரமைப்பு செய்கிறார்கள். 1971ஆம் ஆண்டுக்கு பின்னால் தொகுதி மறுவரையறை 50 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
1971ஆம் ஆண்டுக்கு பின் நாட்டின் பொருளாதாரம் மக்கள் தொகை பெருக்கத்தால் மிகப்பெரும் அளவில் பாதிப்புக்குள்ளானது. இதனால் அன்றைக்கு இருந்த ஒன்றிய அரசு, மக்கள் தொகையை கட்டுப்படுத்த வலியுறுத்தியது. இதனால் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் மக்கள் தொகை குறைப்பு மூலம் பொருளாதர வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு வகித்து உள்ளது.
